புதுச்சேரி: இங்கிலாந்தில் வேலை உள்ளதாக கூறி புதுச்சேரி நபரிடம் ரூ. 3 லட்சத்தை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்தில் வேலை உள்ளதாக கூறி மோசடி!
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் ஒருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார். இதையடுத்து, அதிலிருந்த மொபைல் எண்ணை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய மர்மநபர் இங்கிலாந்தில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அந்த வேலைக்கு விசா மற்றும் விமான டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். இதைநம்பி, மர்ம நபருக்கு ரூ. 3 லட்சத்து 6 ஆயிரத்து 417 அனுப்பியுள்ளார். ஆனால், அதன்பின் மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், லாஸ்பேட்டையை சேர்ந்த பெண், ஆன்லைனில் அழகு சாதன பொருட்கள் ஆர்டர் செய்து ஒரு லட்சத்து 7 ஆயிரம், ஏம்பலத்தை சேர்ந்தவர் 53 ஆயிரத்து 733, கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் 22 ஆயிரம், வெங்கடா நகரை சேர்ந்தவர் போலி கேரளா லாட்டாரி சீட்டு வாங்கி, 5 ஆயிரம், ரெயின்போ நகரை சேர்ந்த பெண் பேஸ்புக்கில் புடவை ஆர்டர் செய்து 7 ஆயிரத்து 340, என 6 பேர் மோசடி கும்பலிடம் 5 லட்சத்து, ஆயிரத்து 490 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் எச்சரிக்கை மற்றும் அறிவுரை
புதுச்சேரி இணைய வழி போலீசார், “இணையத்தில் ஏதேனும் பொருளை வாங்கும் முன்பும் அதன் உண்மைத்தன்மையை நன்கு ஆராய்ந்து, விற்பவரின் முழுமையான விபரங்களையும் சரிபார்த்து பார்த்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் தோன்றும் கவர்ச்சியான விளம்பரங்களை உடனடியாக நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மோசடிக்கு ஆளானவர்கள் உடனடியாக புகார் அளித்தால், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி எளிதாகும் என்பதால், எந்த குற்றச்சம்பவத்தையும் மறைக்காமல் உடனடியாக தகவல் தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எங்கே, எப்படி புகார் அளிப்பது?
இணைய குற்றச்செயல்களுக்கு உள்ளானால் அல்லது சந்தேகத்துக்கிடமான எந்த தகவலையாவது காணும்போது, பொதுமக்கள் பின்வரும் வழிகளைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம்:
- தேசிய அளவிலான இலவச உதவி எண்: 1930
- புதுச்சேரி சைபர் செல் எண்கள்: 0413-2276144 / 9489205246
- மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in
- இணைய தளம்: www.cybercrime.gov.in
விழிப்புணர்வே பாதுகாப்பு
ஆன்லைன் உலகில் அதிகரித்து வரும் போலி விளம்பரங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் தங்களுக்குள் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது தான் மிகச் சிறந்த பாதுகாப்பு. குறிப்பாக பண்டிகை நாட்களில் வரும் சலுகை விளம்பரங்களைப் பார்த்து உடனடியாக நம்பாமல் சற்று ஆராய்ச்சி செய்தால், பெரும் இழப்புகளை தவிர்க்கலாம்.