காதலித்து திருமணம் செய்த மனைவியின் முதலாமாண்டு நினைவு நாளில் பிரபல ரவுடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பிரசாந்த் (வயது 34). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் முன்னதாக குளோரியா எனும் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் பிரசாத்தின் ரவுடித்தனம் மற்றும் வேலையால் மனமுடைந்த குளோரியா கடந்த ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, தனது காதல் மனைவியின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத பிரசாந்த், கடந்த ஓராண்டாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.


இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்.18) குளோரியாவின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதை அடுத்து, பிரசாந்தின் வீட்டுக்கு உறவினர்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர். அப்போது பிரசாந்த் குளோரியாவைப் பற்றி மிகவும் சோகமாக அனைவரிடமும் பேசியபடி இருந்ததாகக் கூறப்படுகிறது.


தொடர்ந்து வீட்டின் அறைக்குள் சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு, தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் பிரசாந்த். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து தீயை அணைத்தனர். பிறகு அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இந்நிலையில் 90 விழுக்காடு தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வந்த ரவுடி பிரசாந்த் நேற்று (செப்.19) அதிகாலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோடம்பாக்கம் காவல் துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.


கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 


மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)


அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.