மதுரை  உசிலம்பட்டி அடுத்த பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ”கௌசல்யா - முத்துப்பாண்டி” தம்பதியர். இத்தம்பதிகளுக்கு  ஏற்கனவே நான்கு மற்றும் இரண்டு வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி சேடப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தாக பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்த இந்த பெண் குழந்தை உடல்நல குறைவு காரணமாக 26ஆம் தேதி காலையில் உயிரிழந்தாக யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக வீட்டின் அருகிலேயே பெற்றோர் புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது.






 

 



 

பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வந்த கிராம செவிலியரிடம் முன்னுக்கு பின் முரணான பதில்களை பெற்றோர் தெரிவிக்கவே சந்தேகமடைந்த கிராம செவிலியர் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் தகவல் அளித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி விசாரிக்கும் போதும் முறையான பதில் இல்லாததால் இந்த சம்பவம் தொடர்பாக சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



 


 

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் முத்துப்பாண்டி - கௌசல்யா வீட்டிற்கு சென்ற போது பெற்றோர்கள் தலைமறைவானது தெரிய வந்துள்ளது. மேலும் பெற்றோர்கள் தலைமறைவாக இருப்பதால் பெண்சிசு கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் பெற்றோர்களை தேடி வருகின்றனர். உசிலம்பட்டி பகுதியில்  மீண்டும் பெண்சிசு கொலை அரங்கேறி இருக்குமோ என்ற அச்சம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

”இது குறித்து முழு விசாரணை நடைபெற்றால் தான் முழு விபரம் தெரியவரும்” - என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

உசிலம்பட்டி பகுதியில் ஆரம்ப காலகட்டதில் அதிகளவு பெண் சிசுக்கொலைகள் நடைபெற்றது. விழிப்புணர்வு ஏற்பட்ட பின் இந்த சம்பவங்கள் குறைந்தது. ஆனாலும் தொடர்ந்து உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக்கொலைகள் நடைபெறுவதாகவும், அதன் குற்றங்கள் வெளியே தெரியாமல் மறைக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.