ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி கருப்பகவுண்டன் புதூரைச் சேர்ந்த விவசாயி சக்தி வேல். இவரது மனைவி 50 வயதான விஜயலட்சுமி கடந்த 2 நாட்களுக்கு முன் தோட்டத்து வீட்டில் தனியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் புகுந்து அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார்.


புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்தனர். இதில் பைக்கில் வந்த நபர் கொள்ளையில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். அத்தாணி பகுதியில் நடந்த வாகன சோதனையில் குறிப்பிட்ட பைக்கில் வந்த நபர், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை செய்ததில், அந்த நபர் கோபி செட்டிபாளையம் அருகே வளையபாளையத்தை சேர்ந்த 29 வயதான கார்த்திக் என்பதும், திருமணமான இவர், இன்ஜினியரிங் முடித்துள்ளார்.


மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்துள்ளார். அப்போது ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் கம்பெனிக்கு செல்லாமல் கடந்த 3 மாதங்களாக சுற்றி திரிந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி செய்யவே கொள்ளையில் ஈடுபட முடிவு செய்து தனியாக இருந்த விஜயலட்சுமியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்று, வங்கியில் அடமானம் வைத்து பணத்தை பெற்றதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுமா..? 


ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் சந்திரு தலைமையிலான குழு கடந்த மாதம் 28 ம் தேதி தனது பரிந்துரைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தார். தொடர்ந்து அந்த அறிக்கையில் உள்ள விஷயங்கள் குறித்தும், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது பற்றியும் அன்றைய தினமே அமைச்சரவை கூட்டத்தில் துறை வாரியாக விரிவாக விவாதிக்கப்பட்டது. 


71 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் அதனை விளையாடுபவர்களின் திறன்கள் எந்த விதத்திலும் அதிகரிப்பதில்லை என்றும் மாறாக அவர்களுடைய திறன்களை குறைக்கும் வேலைகளையே ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் செய்கின்றன. விளையாடும் நபர்களை ஆன்லைன் விளையாட்டுகள் அடிமையாக்குன்றன என்றும் அதோடு அவர்களை கடனாளியாக்கும் திட்டத்துடனே அவை வடிவமைக்கப்பட்டுள்ளது. 


கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணம் இழப்பு அபாயம் இருப்பதாக கூறி தடை போடப்பட்ட நிலையில், அவை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. ஆனால், இந்த முறை இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் பொதுமக்களின் உடல் நலம் மற்றும் மன நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 


மக்களின் நல்வாழ்விற்காக இந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் உரிமையும் அதிகாரமும் மாநில அரசுக்கு இருப்பதாகவும், அதன் அடிப்படையில் தடை செய்தால், நீதிமன்றம் தலையிட முடியாது.


அதேபோல், ஆன்லைன் விளையாட்டுகளால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 17 மரணங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள நீதியரசர் சந்துரு, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களின் பிரதான நோக்கம் லாபமாக இருக்கிறதே தவிர, விளையாடுபவர்களின் திறன்களை மேம்படுத்துவதாக இல்லை. அதனால், இதுபோன்ற விளையாட்டுகள், விளையாட்டுகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு கூட தகுதியற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டுகள் என்பது உடலினை உறுதி செய்வதாகவும், மனதினை தெளிவுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்ற நிலையில், ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள், மொபைல், கம்யூட்டர் போன்ற இயந்திரங்கள் மூலம் விளையாடும் நடைமுறையாக இருக்கிறது. இது விளையாடிய பின், அவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எந்தவிதமான புத்துணர்ச்சியையும் தராமல், மாறாக மன அழுத்தத்தை தருகிறது என நீதியரசர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.