விருத்தாச்சலத்தில் கணவன், மனைவி இடையே இருந்த பிரச்சினை காரணமாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகன், மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலை கைப்பற்றி விருத்தாச்சலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எஜமான் நகரை சேர்ந்தவர் குமார். இவர் தனக்கு சொந்தமாக லேத் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சகீராபானு என்பவருடன் திருமணமாகி 10 வயதில் பெண் பிள்ளையும், 7 வயதில் ஆண் பிள்ளை என இருவர் உள்ளனர். இவர்கள் அனைவரும் விருத்தாசலம் எஜமான் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். 


இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அனைவரும் வீட்டில் தூங்கி உள்ளனர். குமார் வீட்டில் உள்ள ஹாலில் படுத்து தூங்கி உள்ளார். குறிப்பாக கணவன் மற்றும் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருக்கின்ற காரணத்தால் இருவரும் வீட்டில் தனித்தனியாக இருந்ததாக காவல்துறை விசாரணையில் கூறுகின்றனர். அதன்படி வீட்டின் அறையில் மனைவி சகீராபானு மற்றும் தனது இரண்டு பிள்ளைகளுடன் படுத்து உறங்கி கொண்டிருந்தனர். இதனிடையே காலை பிள்ளைகள் இருவரும் பள்ளி செல்ல வேண்டியிருந்த நிலையில், வெகு நேரமாகியும், அறையின் கதவு திறக்காததால் வீட்டின் அருகாமையில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து கணவர் குமார் உள்ளே சென்று பார்த்துள்ளார். 


அப்போது மனைவி, மகள் மற்றும் மகன் மூவரும் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் காவல்துறையினர் மூன்று பேர் உடல்களையும் மீட்டனர். விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு முதற்கட்டமாக கொண்டு சென்றனர். பின்னர் உயிரிழந்த மூவரின் உடல்களையும் உடற் கூராய்வு பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கணவர் குமாரிடம் விருத்தாசலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுகுறித்து காவல்துறை தரப்பில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது, "முதற்கட்ட விசாரணையில் குமார் மற்றும் அவரது மனைவி சகீராபானுக்கு இடையே, கடந்த ஆறு மாதமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் இதில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது இல்லை. மேலும் அவர் கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் சாப்பிடுவதில்லை. தனியாக சாப்பிட்டு கொள்வார். மனைவி மற்றும் பிள்ளைகள் தனியாக சாப்பிட்டு வந்துள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த பிரச்சினை காரணமாக ஒன்றாக உறங்காமல். மனைவி பிள்ளைகளுடன் வீட்டின் அறையில் உறங்குவார். கணவர் குமார் வீட்டில் உள்ள இருக்கும் ஹாலில் உறங்கி வந்துள்ளார். இந்த சூழலில் அண்மையில் கணவர் மனைவி இருவருக்கும் பிரச்சினை இருந்தே வந்துள்ளது. இதனால் மனமுடைந்த குமாரின் மனைவி ஷகீரா பானு, தனது மகன் மகளின் கொன்றுவிட்டு, அதன் பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேற்கொண்டு கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்," என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


Suicidal Trigger Warning


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)