சென்னை திருவல்லிக்கேணியில் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 


சென்னை திருவல்லிக்கேணி காந்தி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மதன் இவருக்கு வயது 36. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த மதன், துறைமுக தொகுதியின் 56 வது வார்டில் பகுதி செயலாளராகவும் இருந்து வந்திருக்கிறார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னர் திமுகவிற்கு மாறிய மதன், திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், திருவல்லிக்கேணியில் திமுக நிர்வாகி ஒருவரின் படத்திறப்பு விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட மதன், நிகழ்ச்சி முடிந்து SM நகர் 8 ஆவது தெருவில் நடந்து வந்ததாக சொல்லப்படுகிறது.




அப்போது திடீரென அவரை சுற்றி வளைத்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து, தப்பித்து மதன் அங்கிருந்து ஓட ஆரம்பித்திருக்கிறார்.


ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்து, அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளது. இதனையடுத்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த  திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், உதவி ஆணையர் பாஸ்கரன் தனிப்படை அமைத்து, கொலையாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் உள்ளம் சிசிடிவி கேமாரா பதிவுகள், மொபைல் சிக்னல்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதனைக் கொண்டு, தனிப்படையினர் 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள் வெளியாகின.   


இது குறித்து போலீசார் கூறும் போது, “ வெட்டிக்கொலை செய்யப்பட்ட மதனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த  கணவரை இழந்த பெண் ஒருவருக்கும் அத்துமீறிய தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தாயின் மகன் பலமுறை கண்டித்திருக்கிறார். ஆனாலும் இருவரும் கேட்பதாக தெரியவில்லை.


இதனால் கோபமடைந்த பெண்ணின் மகன், நண்பர்களுடன் சேர்ந்து மதனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு வந்து கொண்டிருந்த மதனை பெண்ணின்  மகன் தலைமையிலான கும்பல், வெட்டி சாய்த்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக பெண்ணின் மகன் உட்பட நான்கு பேரை கைது செய்திருக்கிறோம். இன்னும் மூன்று பேரை தேடி வருகிறோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.