நெல்லை மாவட்டம் திசையன்விளை  இட்டமொழி அழகப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மெய்கண்ட மூர்த்தி. இவர் அப்பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த சூழலில் வேலை காரணமாக குலசேகரப்பட்டினம் சென்றுள்ளார். அப்போது தனது கடையில் பணிபுரியும் கதிரேசன் என்பவரிடம் கடையை பார்த்துக்கொள்ளும் படி கூறி விட்டு சென்று உள்ளார். இந்த சூழலில் சம்பவத்தன்று கதிரேசன் நகைக்கடையில் இருக்கும் பொழுது இரண்டு வாலிபர்கள் டிப்டாப்பாக உடை அணிந்து கொண்டு கடைக்கு வந்துள்ளனர். அப்போது கதிரேசனிடம் தாங்கள் புதிதாக வீடு கட்ட இருப்பதாகவும், வீட்டின் வாசல் நிலையில் அடிப்பகுதியில் வைப்பதற்கு தங்கத் தகடுகள் மற்றும் நவரத்தினங்கள் வேண்டும் என கேட்டுள்ளனர். பின்னர் மேலும் தேவையான சில  நகைகள் வாங்குவதற்கு மாடல்களையும் காட்டச் சொல்லி உள்ளனர். அதனை நம்பிய கதிரேசன் கடையில் இருந்த பல மாடல்  தங்க நகைகளை  எடுத்துக்காட்டி உள்ளார்,




அப்போது அவர் காட்டிய டிசைன்கள் ஒன்றும் பிடித்ததாக இல்லை எனக்கூறி புது புது மாடல்  நகைகளாக எடுத்து வைக்கச் சொல்லி உள்ளனர். கதிரேசன் ஒவ்வொரு நகையாக எடுத்து வைக்கும் போது  புதிய தங்க நகைகள் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 24 காரட் தங்கக்கட்டி, மற்றும் கோல்டு காயின்கள் ஒரு டப்பாவில் இருப்பதை நோட்டமிட்டுள்ளனர். அதனை எடுக்க முடிவு செய்த அவர்கள் கதிரேசன் கீழே குனிந்து நகைகளை எடுக்கும் நேரத்தில்  கதிரேசனின் கவனத்தை  திசைதிருப்பி டப்பாவில் வைக்கப்பட்டிருந்த கோல்ட் காயின் , தங்கக் கட்டி, மற்றும் பல சிறிய நகைகள் உட்பட 11 சவரன்  தங்க நகைகளை லாவகமாக  எடுத்து பின்னால் நிற்கும் மற்றொரு வாலிபரிடம் கொடுத்து விடுகிறார்,


 






அதன் பின்னர் வாசல்  நிலையின் அடியில் வைப்பதற்கு வாங்கிய பொருளுக்கு மட்டும் 1200 ரூபாயை கதிரேசனிடம் கொடுத்துவிட்டு நல்லவர்கள் போல்  கதிரேசனிடம் பேசிவிட்டு இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் பறந்து சென்று விட்டனர். இந்த நிலையில் கடைக்கு  வந்த கடையின் உரிமையாளர் மெய்கண்ட மூர்த்தி தான் ஆர்டர் எடுத்த நகைகளை செய்வதற்கு தங்கக் கட்டிகளை தேடிய போது தங்கக்கட்டி, மற்றும் கோல்ட் காயின் மேலும் சில நகைகள் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கதிரேசனிடம் விசாரித்து உள்ளார். தனக்கு எதுவும் தெரியாது என கதிரேசன் கூற கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை மெய்கண்ட மூர்த்தி ஆய்வு செய்துள்ளார். அப்போது கதிரேசனை திசை திருப்பி நகைகளை இரண்டு டிப்டாப் வாலிபர்கள் திருடிச் சென்றது  தெரிய வந்தது,




இதுகுறித்து  திசையன்விளை காவல்நிலையத்தில் கடையின் உரிமையாளர் மெய்கண்ட மூர்த்தி புகார் அளித்தார், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் திசையன்விளை காவல் ஆய்வாளர் ஜமால் தலைமையிலான காவல்துறையினர் திருட்டு நடந்துள்ள கடைக்கு வருகை தந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து டிப்டாப் வாலிபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது, இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.