நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் உள்ள கல்குவாரி அருகே கேரளாவைச் சேர்ந்த இருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அருகில் இருந்த சொகுசு காரை பறிமுதல் செய்து காவல் துறையினர் தற்கொலையா? கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் செல்லும் வழியில் பூதனல்லி வனப்பகுதியில் கல்குவாரி ஒன்று இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்த கல்குவாரி அருகே இரண்டு சடலங்கள் இருப்பதைக் கண்டு கால்நடை மேச்சலுக்கு சென்றவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதியமான் கோட்டை காவல் துறையினர் சடலங்கள் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அப்பொழுது இருவரின் சடலம் 10 மீட்டர் இடைவெளியில் இருந்துள்ளது. மேலும் சடலத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் கேரள பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  மேலும் இரண்டு பேரின் சடலத்தில் லேசான காயங்கள் இருந்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். 

 



 

 

 

தொடர்ந்து கார் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் இருவரும் கேரளாவை சேர்ந்த சிவகுமார் மற்றும் நிக்கோல் குருஸ் என்பது தெரியவந்தது. இந்நிலையில் இது தற்கொலையா? அல்லது யாரேனும் கொலை செய்துவிட்டு, இந்த வனப்பகுதியில் வீசிவிட்டு சென்றனரா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பைரவா வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். இதனையடுத்து இருவரின் உறவினர்களுக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சடலங்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சடலங்கள் இருந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் மற்றும் ஒரு சில உடமைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

 



 

 

 

இதனை தொடர்ந்து வனப் பகுதியில் காவல் துறையினர் தடயங்களை தேடி நீண்ட நேரம் சுற்றி வந்தனர். ஆனால் எதுவும் கிடைக்காததால், தற்போது செல்போன் சிக்னல் வைத்து குற்றவாளிகளை பிடிக்கவும் மற்றும் தடயங்களை சேகரிக்கும் பணியில் தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் கார் உரிமையாளரை தொடர்பு கொண்டு, காரை யார் வாங்கி சென்றார்? அவர் என்ன தொழில் செய்து வந்தார்? என்பது குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர். நல்லம்பள்ளி அருகே வனப் பகுதியில், மர்மமான முறையில் இருவர் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.