டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய பெண்ணை பொதுமக்கள் சிலர் தாக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தச் சம்பவத்திற்கு பிறகு அவர் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்துள்ளார். 


இதைத் தொடர்ந்து டெல்லி மகளிர் ஆணையம் சார்பில் டெல்லி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லி கஸ்தூர்பா நகரைச் சேர்ந்த 20 வயது மதிக்க தக்க பெண் ஒருவரை 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மூன்று பேரும் அந்தப் பகுதியில் சட்ட விரோதமாக மது மற்றும் போதை பொருள் விற்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. 


அந்த நபர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த இந்தப் பெண்ணை வழு கட்டாயமாக இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அதன்பின்னர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை அருகே இருந்த மக்கள் அடித்து உதைத்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் தலை முடியை வெட்டி அவருடைய முகத்தில் கருப்பு பொடியை பூசியுள்ளதாக தெரிகிறது. மேலும் அந்தப் பெண்ணை அவர்கள் துன்புறுத்தியுள்ளனர். 


இந்த சம்பவத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் பேசியுள்ளார். அதற்குபின் இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்த 72 மணி நேரத்தில் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 






இந்தப் புகாரை அடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை காதலித்துள்ளதாக தெரிகிறது. அந்த நபர் திடீரென தற்கொலை செய்துள்ளார். அவருடைய திடீர் மரணத்திற்கு இந்தப் பெண் தான் காரணம் என்று அவருடைய உறவினர்கள் கருதுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண்ணை அவர்கள் தொடர்பான நபர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


மேலும் படிக்க: மதச்சடங்கு குறித்து கேள்வி: மொத்த குடும்பத்தையும் சரமாரியாக கத்தியால் குத்திய சாமியார்!