தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்  சங்கத்தின்

  மாநில நிர்வாக குழு கூட்டம் தஞ்சாவூர் சங்க அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் அ.சாமிக்கண்ணு, மாநில செயலாளர் ஜி. சுப்ரமணியம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார், மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன், செயலாளர்கள் கே எஸ் முருகேசன், எம் எஸ் கிருஷ்ணன், எம். கலியபெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டன. சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ‌கூலி உயர்வு அறிவித்தும் நெல் கொள்முதலில் குறைபாடுகள் குறையவில்லை என்ற பல்வேறு தரப்பினரின் கருத்துக்களும் பரிசீலிக்கப்பட்டு நெல் கொள்முதலில் உள்ள குறைபாடுகளை களைவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.




குறிப்பாக குறைபாடுகளுக்கு அடிப்படையான காரணமான லாரி வாடகைக்கு மேல் மாமுல் என்ற பெயரில் லஞ்சம் கேட்பது, அதிகாரிகளுக்கு மூட்டைக்கு இவ்வளவு லஞ்சம் பெறும் நிரந்தர நடைமுறை, நியாயமற்ற முறையில் எடை இழப்பு  தொகை வசூலிப்பது போன்றவற்றை தடுக்க சங்க சார்பில் நடவடிக்கை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. வருகிற 1-ஆம் தேதியில் இருந்து  முதல்கட்டமாக சங்கத்தின் சார்பாக அனைத்து  கொள்முதல் நிலையங்களிலும் கடும் முயற்சி மேற்கொண்டு   கொள்முதல் நிலையத்திற்கு வருகின்ற லாரிகள் நெல் ஏற்றுவதற்கு மாமூல் கேட்டால் அந்த லாரிகளில் நெல் ஏற்றுவது இல்லை என்றும்,  மேல் அதிகாரிகள் லஞ்சம் கேட்கும் பொழுது தர மறுத்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதே போல உரிய பரிசீலனையின்றி  எடை குறைவு இழப்பு தொகை செலுத்த வற்புறுத்தினால் இழப்புத்தொகை செலுத்துவதில்லை. என முடிவெடுக்கப்பட்டது.  




விளக்கம் கேட்டு விளக்கம் அளித்து அதன் அடிப்படையில் தீர்வு காண வலியுறுத்துவது, மேற்கண்ட பிரச்சனைகள் குறித்து முதுநிலை மண்டல மேலாளர்களை நேரில் சந்தித்து முறையிட்டு ஒத்துழைப்பு கோருவது என  முடிவெடுக்கப்பட்டது. விவசாயிகள், பத்திரிக்கை ஊடகங்கள் மூலமாக  செய்தி கொடுப்பது சாலை மறியலில் ஈடுபடுவதும் விளம்பரத்திற்கு உதவுமே தவிர தீர்வுக்கு வழி ஏற்படாது என்பதை உணர்ந்து முறைகேடுகளை பார்வையாளராக இருந்து பார்த்து கொண்டு இருக்காமல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகளை களைய கொள்முதல் பணியாளர்களோடு இணைந்து நின்று  ஒத்துழைப்பு தர வேண்டுகோள் விடுக்கப்பட்டது.




தமிழ்நாட்டில் நெல் கொள்முதலில் சிறிதும் பொருத்தமற்ற ஆன்லைன் முறை செயல்படுத்த மத்திய அரசு வற்புறுத்துவது கண்டனத்துக்குரியது. இது மாநில உரிமையில் தலையிடுவதோடு முறையாக கொள்முதல் நடைபெறுவதை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். எனவே மத்திய அரசு இதனை கைவிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வசதிக்கேற்ப விதிமுறைகளை வகுத்து நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். தேவையான சேமிப்பு நிலையங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சேமிப்பு நிலையங்களில் தற்போது இருப்பில் உள்ள நெல் மூட்டைகளை உடன் இயக்கம் செய்ய வேண்டும். காலியிடமின்றி கொள்முதல் நிலையத்திற்கு மூன்று பணியாளர்கள்  முழுதுமாக நியமனம் செய்யப்பட வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான தார்ப்பாய் வழங்க வேண்டும்  2012 ஆண்டுமுதல் தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்ற கொள்முதல் பணியாளர்களை ஒப்பந்தப்படி பணி நிரந்தரப் படுத்தப்பட வேண்டும்.  சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.