Crime: தலைநகர் டெல்லியில் 18 வயது இளைஞர் 60 முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


நாட்டில் நடக்கும் ஒவ்வொரு கொலை சம்பவங்களும் அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கி வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் அரங்கேறும் சம்பவங்கள் பேசுபொருளாகி வருகிறது. சமீபத்தில் கூட, 16 வயது சிறுமி 25 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்து.  இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. அதன்படி, டெல்லியில் 18 வயது இளைஞர் ஒருவர் பலமுறை குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 


60 முறை குத்திக் கொல்லப்பட்ட இளைஞர்:


டெல்லியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், 18 வயது இளைஞரை கொடூரமாக கொலை செய்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் உள்ள வெல்கம் என்ற பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. வெல்கம் பகுதியில் இருக்கும் ஒரு குறுகிய சாலையில் 18 வயது இளைஞர் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த குறுகிய சாலையில் 18 வயது இளைஞருக்கு எதிர் பக்கத்தில் 16 வயது சிறுவன் வந்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் 18 வயது இளைஞரிடம் முதலில் பேச்சு வார்த்தை கொடுத்துள்ளார். பின்னர், அந்த இளைஞரிடம் சிறுவன் பணத்தை பறிக்க முயன்றுள்ளார். இளைஞர் அவரது கையில் வெறும் 350 ரூபாய் மட்டுமே வைத்திருந்தார். அதை கொள்ளையடிக்கவே 16 வயது சிறுவன், அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.


அந்த இளைஞர் பணத்தை கொடுக்க மறுக்கவே, அவரை அடித்து, கழுத்தை நெரித்திருக்கிறார். பின்னர், அந்த இளைஞரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இளைஞரின் கண், வாயில் சரமாரியாக குத்தியிருக்கிறார். சுமார் 60 முறை குத்தியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இளைஞர் உயிரிழந்ததை உறுதி செய்த பிறகு, அந்த சிறுவன் விடாமல் பலமுறை கத்தியால் குத்தியிருக்கிறார். அதன் பிறகும், ஆத்திரம் அடங்காமல் தலையிலும் பலமுறை ஆவேசமாக உதைக்கிறார். அதன்பிறகு, அந்த சடலத்தின் மேலே ஏறி நடனம் ஆடியிருக்கிறார்.  


பகீர் வீடியோ:


இது சம்பந்தமான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி  பார்ப்போரை அதிர்ச்சிகுள்ளாக்கி வருகிறது.  அந்த வீடியோவில், 18 வயது இளைஞரை, 16 வயது சிறுவன் கத்தியால் சரமாரியாக குத்தியிருக்கிறார். கண், வாய் என முகத்தில் பல முறை குத்தியுள்ளார். பின்னர், ஆத்திரம் அடங்காமல் இளைஞரின் தலையில் பல முறை உதைக்கிறார். அதன்பிறகு சடலத்தில் மேலே ஏறி நின்று நடமாடுவது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது.


இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ”சிறுவன்  ஒருவன் இளைஞரை சரமாரியாக குத்திக் கொன்றதாக எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால், அவர் உயிரிழந்துள்ளார். சுமார் 60 முறை இளைஞர் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. அதன்அடிப்படையில் குற்றவாளியை கைது செய்தோம்"  என்றனர்.