கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசுப் பள்ளியின் கழிவறையில் நான்கு நாட்களுக்கு முன்பு சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்த சிசுவின் தாய் அந்த பள்ளியிலும் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவி என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.


இதையடுத்து, அடையாளம் காணப்பட்ட 16 வயது சிறுமியை கண்டறிந்த காவல்துறையினர், மாணவியின் உடல்நலத்தை கருத்தில்கொண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சிறுமியை கர்ப்பமாக்கிய நபரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் அதி தீவிரமாக விசாரணையைத் தொடங்கினர்.


நடந்தது என்ன..? 


கடந்த வியாழக்கிழமை மாலை கழிவறைக்கு அருகில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை ஒன்று அருகில் இருந்த முள் புதரில் எறும்புகள் சூழ சடலமாக கிடந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறியிருக்கின்றனர். இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் புவனகிரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்ட தகவலில், ’ஒரு வகுப்பில் கலந்துகொண்டு கழிவறைக்கு வந்தபோது பிரசவ வலியை உணர்ந்துள்ளார். தொடர்ந்து கழிவறையில் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின் போது சிறுமிக்கு யாரும் உதவாததால் குழந்தை இறந்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். சிறுமி தெரிவித்த ஆரம்ப அறிக்கையின்படி ஒரு பேனாவைப் பயன்படுத்தி தொப்புள் கொடியை தானே வெட்டிவிட்டு மீண்டும் வகுப்பறைக்கு வந்ததாகக் கூறினார்’ என்று தகவல் தெரிவித்தனர். 


மேலும், தான் கர்ப்பமாக இருப்பது குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. தனது கர்ப்பத்திற்கு காரணம் 10 ம் வகுப்பு படிக்கும் தனது உறவினர் முறையில் சகோதரன் என்றும் தெரிவித்தார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். 


மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், பத்தாம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த மாணவனும் தனது சகோதரியின் கர்ப்பத்திற்கு தான் காரணம் என வாக்குமூலம் கொடுத்தார். இதன் காரணமாக 10 ம் வகுப்பு மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 5(j), 5(L) & 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


போக்சோ சட்டம் : 


கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.


18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 



  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்

  • Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்

  • Sexual Assault - பாலியல் தொல்லை

  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை

  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு

  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்


இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.



  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை

  • இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை

  • 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)