கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தன் தாய் தற்கொலைக்கு சுதன்குமார் காரணமாக இருந்தால் இந்த கொலையை செய்ததாக கைது செய்யப்பட்டவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்து, தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

ஹைதராபாத்தில் பணிபுரிந்த ஐடி ஊழியர் ஆன சுதன்குமார், அவருடைய தாய் கமலேஸ்வரி மற்றும் சுதன்குமாரின் மகன் நிஷாந்தன் (10) ஆகிய மூன்று பேரும் கடந்த திங்கட்கிழமை காராமணிக்குப்பத்தில் உள்ள தங்களது வீட்டில் விட்டு காயங்களுடன்  எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

 

அந்த வீட்டில் ரத்த கரைகள் இருந்ததை வைத்து அவர்கள் மூவரும் கொலை செய்யப்பட்டு பின்பு தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் டிஎஸ்பி பழனி தலைமையில் 5 தனிப்படைகளை அமைத்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

 

சுதன்குமாருக்கு  நெருக்கமானவர்கள், வீட்டின் அக்கம் பக்கத்தினர் என கடந்த நான்கு நாட்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதே தெருவில் வசித்து வரும் சங்கர் ஆனந்த்(21) என்பவரை நேற்று சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

 

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டபோது சங்கர் ஆனந்தின் கைவிரலில் கத்தி பட்ட காரணமாக அவரது கைவிரல் துண்டானது. இந்த நிலையில் அவரை நெல்லிக்குப்பம் கொண்டு வந்து விசாரித்த போது அவருடன் சாகுல் ஹமீது என்பவரும் இணைந்து செயல்பட்டது தெரியவந்தது. இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது சங்கர் ஆனந்த் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்தார்.

 

தந்தையை இழந்த நான் தாயுடன் வாழ்ந்து வந்ததாகவும், கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய தாயார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். தற்கொலைக்கு காரணம் சுதன்குமார் தான் என தெரியவந்தது. அதனால் அவரது குடும்பத்தை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கமலேஸ்வரி தன்னுடைய பேரனுடன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது நிஷாந்தனிடம் தான் சென்று விளையாடியதாகவும் அப்போது தன்னை அனாதை என்ற வார்த்தையை சொல்லி கமலேஸ்வரி திட்டியதால் கடும் கோபம் அடைந்து வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டிற்கும் சென்று மூன்று பேரையும் வெட்டி படுகொலை செய்ததாகவும், அப்போது கத்தி  தவறுதலாக தன்னுடைய இன்னொரு கையில் பட்டு தன்னுடைய விரல் துண்டானதாகவும் தெரிவித்தார். 

 

மேலும் திங்கட்கிழமை காலை ஷாகுல் ஹமீதுடன் மீண்டும் அந்த வீட்டிற்க்கு சென்று அங்கு உடல்களை தீ வைத்து கொளுத்தியதாக அவர் தனது வாக்குமூலத்தை தெரிவித்துள்ளார். மேலும் போலீசாரின் தொடர் விசாரணையில் சங்கர் ஆனந்திடமிருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நகைகள் எங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்று விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். சாகுல் ஹமீது மற்றும் சங்கர் ஆனந்த இடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.