கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் நாகப்பன் மகன் பாஸ்கர் (34) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி (23). கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கூத்தப்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பாஸ்கர் உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 

 

இந்த நிகழ்ச்சியில் அதே ஊரை சேர்ந்த சிவகுரு மகன் விஷ்ணு, பத்மநாபன் மகன் பூமிநாதன், பிரேம்குமார் ஆகியோர் நடனம் ஆடியுள்ளனர். இதை அன்பரசன் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை உறவினர்கள் தலையிட்டு சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர். இந்நிலையில் நேற்று ஜிந்தா ப்ரீத்தியின் தம்பி அஜய் திருப்பாதிரிப்பலியூரில் உள்ள சோலைபுரத்து மாரியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது அந்த வழியாக வந்த விஷ்ணு, பூமிநாதன், பிரேம்குமார் ஆகியோர் அஜயை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாஸ்கர், மற்றும் அவரது உறவினர்கள்  சிலர் இரவு பத்மநாபன் வீட்டிற்கு சென்று இது குறித்து தட்டிக் கேட்டுள்ளனர்.

 

அப்போது அங்கு இருந்த சிவகுரு (31), பத்மநாபன் மகன் சத்யா (45), சிவகுரு மனைவி அகிலாண்டம் (45), அருள் மகன் அருண் (31) உள்ளிட்ட சிலர் அவர்களை கட்டையாலும், வேறு சில ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பாஸ்கரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.



 

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் துணை காவல் கண்கானிப்பாளர் பிரபு தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப் - இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதோடு மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

இந்த நிலையில் பாஸ்கர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் ஏராளமானோர் நவநீதம் நகர் மற்றும் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். இதற்கிடையில் இறந்த பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அனுப்பி வைத்தனர். 



 

இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் இறந்த பாஸ்கரன் மனைவி ஜிந்தா ப்ரீத்தி கொடுத்த புகாரின் பேரில் சிவகுரு, விஷ்ணு, பத்மநாபன், பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 11 பேர் மீது கொலை வழக்கும், திருமுருகன் கொடுத்த புகாரின் பேரில் முரளி உட்பட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்த கொலை வழக்கில் சிவகுரு , அருண்ராஜ் , சுனில் , நக்கீரன் ,விஷ்ணு , பத்மநாபன் ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூரில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.