சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைகூடலை பகுதியை சேர்ந்தவர் ராஜா (58). இவரது மனைவி வெண்ணிலா (55). மருமகள் சுகந்தி ஆகியோர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்தனர். அப்போது பிரபல ரவுடி லல்லு என்கின்ற லல்லு பிரசாத் (28), அவரது மனைவி கோமதி, விஜய் என்கின்ற வெள்ளையன் ஆகியோர், ராஜாவின் வீட்டிற்கு சென்று வெண்ணிலாவின் கழுத்தில் வீச்சரிவாள் வைத்து, ரூபாய் 1 லட்சம் பணத்தை உடனே கொடுக்க வேண்டும். கொடுக்காவிட்டால் உனது மகனை கொலை செய்ததை போல உன்னையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும், ராஜாவை தாக்கி, அவரது சட்டைப்பையில் இருந்த ஆயிரத்தை பறித்தனர். அப்போது, வெண்ணிலா கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்த மூவரும் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து கருமலைகூடல் காவல் நிலையத்தில் வெண்ணிலா புகாரளித்தார். வழக்கு பதிவு செய்த கருமலைகூடல் காவல்துறையினர், லல்லுவின் மனைவி கோமதியை கைது செய்து சேலம் பெண்கள் சிறையில் அடைத்தார். 



இந்நிலையில், தப்பியோடிய லல்லு பிரசாத், வெள்ளையன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வந்தனர். நேற்று மாலை மேட்டூர் மலைப்பாதையில் காவல்துறையினர் சென்ற போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் இரு சக்கர வாகனத்தை வேகமாக திருப்பி தப்ப முயன்றனர். அப்போது கீழே விழுந்ததில் இருவருக்கும் கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டது. லல்லு பிரசாத் மீது 3 கொலை வழக்கு உள்பட கொள்ளை, அடி தடி என 30 வழக்குகள் உள்ளது. வெள்ளையன் மீது ஒரு கொலை வழக்கு, 4 வழிப்பறி வழக்கு உள்பட 8 வழக்குகள் உள்ளது. காயமடைந்த இருவரையும் மீட்ட கருமலைகூடல் காவல்துறையினர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர். ராஜாவின் மகனே இதே கும்பல் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.