விருதுநகர் மாவட்டம்  சிவகாசியை சேர்ந்தவர் அந்தோணி பிச்சை (65). இவருடைய மனைவி ஜெயலட்சுமி (60). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் முதிய தம்பதியரான இருவரும் நேற்று நெல்லை மாவட்டம் உவரியில் உள்ள அந்தோணியார் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் உவரி அந்தோணியார் ஆலயம் எதிர்புறம் உள்ள உவரி பேரறிஞர் அண்ணா பேருந்து பயணிகள் நிழற்கூடத்திற்கு வந்து அங்கு நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்தோணி பிச்சை தான் வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் தனது மனைவி ஜெயலட்சுமியின் கழுத்தை அறுத்துள்ளார். அப்போது அவர் செய்வதறியாது கழுத்தறுபட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தார். பின்னர் மனைவியை அறுத்து கொலை செய்த அதே கத்தியால் தன்னுடைய கழுத்தையும் அறுத்துள்ளார். இதில் அவரும் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நிலையில் கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த உவரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.


அப்போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தோணி பிச்சை கையில் பேப்பர் மற்றும் பேனாவை கேட்டு வாங்கி அதில் தனது பெயர், தனது மனைவி பெயர், தன்னுடைய சொந்த ஊரான சிவகாசியில் தான் குடியிருக்கும் முனீஸ்வரன் காலனி ஆகிய குறிப்பை அவரே எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு தற்போது அந்தோணி பிச்சை உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மருமகள் கொடுமை காரணமாக அந்தோணி பிச்சை தனது மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.  மருமகள் கொடுமை படுத்தியதாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதுமை  காலத்தில் வயதான தம்பதியரான கணவரே மனைவியைக் கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உவரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண