நெல்லை மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலாமடை பகுதியைச் சேர்ந்தவர் பேச்சி. இவரது மனைவி ஆறுமுக கனி. இவர்களுக்கு அருணா (19) என்ற மகள் உள்ளார்.அவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். ஓட்டுனரான பேச்சி சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் நர்சிங் மாணவியான அருணா மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வருவதாக தெரிகிறது. குடும்பத்தில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யவே தனது காதலை தாய் ஆறுமுக கனியிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே மகளை நெல்லைக்கு வருமாறு அழைத்துள்ளார் தாய். 




நெல்லை மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்திற்கு அருணா வந்த நிலையில் அவர் சமூகத்தைச் சேர்ந்த வேறு ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் முடிக்க முயற்சி நடந்துள்ளது. புதன்கிழமையான இன்று மாப்பிள்ளை பெண்ணை பார்க்க வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தாய், மகள் இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேறு மாப்பிள்ளைக்கு திருமணம் முடிக்க நினைத்தால் அந்த மாப்பிள்ளை இடமே தனது காதலை கூறி காதலனுடன் சென்று விடுவதாக மகள் அருணா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் தனது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.




கொலை சம்பவம் வெளியே தெரிந்து தாம் மாட்டிக்கொள்வோம் என நினைத்த அவர் வீட்டில் இருந்த ஹேர் டை மற்றும் மாத்திரைகளை விழுங்கியதாக தெரிகிறது. தகவல் தெரிந்து அருகில் இருந்தவர்கள் ஆறுமுக கனியை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்த அருணாவின் உடலை கைப்பற்றிய சீவலப்பேரி போலீசார் உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாயே மகளை கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்...