Crime : கேரளாவில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட தோழியை அவரது நண்பரே துண்டாக துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


தொடரும் கொலைகள்


இதைத்தொடர்ந்து, இதேபோன்ற கொலை சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நிகழ்வது மக்களை உச்சக்கட்ட அச்சத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கேரளாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதன்படி, கேரள மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்தவர் அதிரா (26). இவர் அதே பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார்.  இவரது கணவர் சனில். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி தனது மனைவி அதிராவை காணவில்லை என கணவர் சனில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 


இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரமாக நடத்தினர். அப்போது கடைசியாக தும்பூர்முழி என்ற இடத்தில் இருந்தது தெரிந்தது. மேலும், தன்னுடன் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் அகில் என்பவருடன் காரில் புறப்பட்டு சென்றதும் விசாரணையில் தெரிந்தது. இதனை அடுத்து, அகில் என்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். 


விசாரணையில் அம்பலம்


கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதிராவிடம் பணம், நகையை அகில் கடனாக வாங்கி உள்ளார். ஆனால் கடந்த மாதம் பணத் தேவை ஏற்பட்டதால் அகிலிடம் கொடுத்த பணத்தையும், நகையும் அதிரா கேட்டுள்ளார். ஆனால் பணத்தை ஒரு வாரத்திற்கு பிறகு தருவதாக கூறிய அகில் தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் அதிராவுக்கும் அகிலுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அகில் அதிராவை கொலை செய்ய திட்டமிட்டார். 


அப்போது சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி அதிராவை தனியாக அழைத்துள்ளார். அதன்பின், அதிரா அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை நெறித்துக் கொன்றார். பின்னர், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டுள்ளார். பின்னர், தும்பூர்முழி என்ற இடத்தில் இருக்கும் காட்டில் வெட்டப்பட்ட உடல் பாகங்களை புதைத்துள்ளார்.  


கைது


உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து, அகிலை போலீசார் கைது செய்துள்ளர். இதனை அடுத்து, அதிராவின் உடல் பாகங்களையும் புதைத்த இடங்களையும் அகில் போலீசாருக்கு அடையாளம் காண்பித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட தோழியை அவரது நண்பரே துண்டாக துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.