Crime : மகாராஷ்டிராவில் 15 வயது சிறுமி ஒருவர் யூடியூப் பார்த்து குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அடிக்கடி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். அதில் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளைடைவில் அவர்கள் இருவரும் வாட்ஸ் ஆப் கால் மூலம் நெருங்கி பழகி வந்துள்ளனர். பின்பு இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், ஒரு நாள் இருவரும் தனியாக சந்தித்தனர். 


அப்போது, அந்த நபர் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். நாளடைவில் 15  வயது சிறுமியின் வயிறு பெரிதாகி உள்ளது. இதுகுறித்து சிறுமியிடம்  அவரது தாய் கேட்டபோது, தனக்கு உடலில் சில பிரச்சனைகள் இருப்பதாக கூறினார். சிறுமியின் தாய்  இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார். 


பிரசவத்திற்கான நாள் நெருங்கிய நிலையில், அந்த சிறுமி மருத்துவமனைக்கு சென்றால் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து தனக்கு தானே பிரசவம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதனை அடுத்து, அந்த சிறுமி  குழந்தை பெற்றெடுப்பது பற்றி யூடியூப்பில் பார்த்துள்ளார். அதில் இருக்கும் வழிமுறைகளின் படி மார்ச் 2ஆம் தேதி குழந்தையை பெற்றேடுத்துள்ளார்.  


சிறிது நேரத்தில் குழந்தை அழுதுள்ளது. இதனால் சத்தம் கேட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது என்றும் அம்மாவுக்கு தெரிந்துவிட கூடாது என்றும் நினைத்து குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.  பின்னர், குழந்தையின் உடலை வீட்டில் உள்ள ஒரு  துணிப் பெட்டியில் மறைத்து வைத்துக் கொண்டார்.


இதனை அடுத்து வேலை முடிந்து வீடு திரும்பிய சிறுமியின் தாய், வீட்டின் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சிறுமியிடம் கேட்ட போது, மாதவிடாய் என்று கூறியுள்ளார். இதனை நம்பாத அவரது தாய் உண்மையை சொல்லும்படி கேட்டிருந்தார். அப்போது சிறுமி நடத்தவற்றை எல்லாம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் செல்போனை ஆய்வு செய்து பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.




மேலும் படிக்க


"மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன் ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள்" - தொடரும் தற்கொலை