Crime : சென்னை அரும்பாக்கத்தில் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் வீட்டில் 40 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காவல் ஆய்வாளர் மனைவி:


சென்னை அரும்பாக்கத்தில் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர்  கங்கா (70). இவர் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவி ஆவார். கணவர் இறந்துவிட்டதால் அரும்பாக்கதில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு மகாதேவன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனம் ஒன்று அரும்பாக்கத்தில் நடத்தி வருகிறார்.


இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கங்கா வீட்டிற்கு நான்கு பேர் வந்துள்ளனர். வீடு வாடகைக்கு இருக்கிறதா என்று கேட்டுள்ளனர். கங்காவும் கதவை பாதி திறந்த நிலையில், அவர்களுக்கு பதிலளித்துள்ளனர். பின்னர், அந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை திறந்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தனர். இதனை அடுத்து, கங்காவை கத்தியை காட்டி மிரட்டியதோடு இல்லாமல், கை, கால்களை கட்டிப் போட்டுள்ளனர்.


40 சவரன் கொள்ளை:


பின்னர், வீட்டில் இருக்கும் பீரோவை உடைத்து அதில் இருக்கும் 40 சரவன் தங்கம் மற்றும் ரூ.60 ஆயிரத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும், மூதாட்டி என்று கூட பார்க்காமல்,  கத்தியால் அவரது கையை வெட்டியதோடு, அவரை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்துள்ளனர்.


இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்தால் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவோம் என்று மிரட்டி அங்கிருந்து மர்ம நபர்கள 4 பேர் தப்பியோடினர்.  அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கங்காவின் வீட்டிற்கு வந்தனர். அப்போது கங்கா கட்டிப்போட்ட நிலையில், நிர்வாணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


கையில் வெட்டு:


கொள்ளையடித்த மர்ம நபர்கள் அவரது கையை கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கங்காவை அக்கம் பக்கத்தினர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதனை அடுத்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதற்கிடையில், கங்காவின் மகன் மகாதேவன் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இதனால் அவர் பலரிடம் பணம் வாங்கியுள்ளார். மேலும் இவர் நடத்தி வரும் நிறுவனத்தில் தொழில் போட்டி இருந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே பணப் பிரச்சனையில் அவருடைய மகனை தேடி வந்து அவர் வீட்டில் இல்லாததால், கங்காவை வீடு புகுந்து கட்டிப் போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  


இந்நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மூன்று பேதை போலீசார் தேடி வருகின்றனர்.




மேலும் படிக்க


Watch Video: பசியுடன் வாடிய பள்ளி குழந்தைகள்.. களமிறங்கி ’ஓமப்பொடி’ வறுத்த ஐஏஎஸ் அதிகாரி.. வைரலாகும் வீடியோ!