போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில், கோவை மாவட்ட காவல் துறையினர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் தாத்தூர் பிரிவு அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷஹாபுதீன் (50) மற்றும் அவரது மகன் ஆரிஃப் ராஜா(20) ஆகியோரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்களிடமிருந்து 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 3 கிலோ 100 கிராம் கஞ்சா சாக்லேட்டை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


6 கிலோ கஞ்சா பறிமுதல்




இதேபோல கோவை மாவட்டம் சோமனூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் காவல் துறையினர் சோமனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோபி (27) , சக்திவேல் (26) மற்றும் ஐகோர்ட் மகாராஜன்(22) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 6 கிலோ 300 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


காவல் துறை எச்சரிக்கை


கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2024 முதல் தற்போது வரை காவல் துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 77 நபர்கள் மீது 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 95.58 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.