செங்கல்பட்டு அருகே ராணுவம் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் பகுதியில் கிடைக்கும், ராக்கெட் லாஞ்சர் உதிரிபாகங்களை சேகரித்துக் சேகரித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென வெடித்ததால், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் .


அனுமந்தபுரம் துப்பாக்கிச்சூடு பயிற்சி மையம்


செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியில் ஆர்.பி. எப் ,சி.ஆர்.பி.எப் உள்ளிட்ட மத்திய ராணுவத்தில் பணிபுரிபவர்கள், அனுமந்தபுரம் பகுதியில் உள்ள துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் ராணுவத்தினர் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் ஆகியவர்களை இலக்குகளை நோக்கி சுட்டு அவர்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய முக்கிய, ராணுவ பயிற்சி மையமாக இந்த பயிற்சி மையம் இருந்து வருகிறது.




இதில் 100 மீட்டர் 200 மீட்டர் 300 மீட்டர் 500 மீட்டர் வரை பல்வேறு வகையான துப்பாக்கியால் , சுட்டு ராணுவத்தினர் பயிற்சி மேற்கொள்வார்கள். இதில் இரண்டு கிலோ மீட்டரில் இருந்து சுடும் ராக்கெட் லாஞ்சர்கள் மலையில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்க தாக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும். இவ்வாறு பயன்படுத்தப்படும் ராக்கெட் லாஞ்சர்கள், இலக்கை தாக்கி பிறகு காட்டுப்பகுதியில் சிதறி கிடக்கும். 


சிறு பணத்திற்காக ஆசைப்படும் மக்கள்


இதுபோன்ற ராக்கெட் லாஞ்சர்களின், அதனுடைய அலுமினியம் பித்தளை போன்ற உதிரி பாகங்கள் சிதறி கிடக்கும். இவற்றை பழைய பொருட்கள் வாங்கும் கடையில், கொடுத்தால் பணம் கிடைக்கும் என்பதால், இப்பகுதியில் உள்ள மக்கள் அவற்றை துப்பாக்கிச் சூடு முடிந்த பிறகு பொறுக்கிச் செல்கின்றனர் .


இந்தநிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ராக்கெட் லாஞ்சர் கொண்டு செல்லும்போது, அது கீழே விழுந்து வெடித்ததில், மூதாட்டி உள்ளிட்ட இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமந்தபுரம் பகுதியில் வசிக்கும் கோதண்டன் (வயது 52 ) என்பவர் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை எடுத்துச் சென்று தான் வைத்திருந்த கத்தியால் உடைத்த போது, அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் பலத்த காயம் அடைந்த கோதண்டத்தை மீட்ட அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




சட்டப்படி குற்றம்


இதுகுறித்து மறைமலைநகர் காவல் துறையிடம் விசாரணை மேற்கொண்ட போது , இது ராணுவத்திற்கு சொந்தமான பொருள் இதை யாரும் எடுத்துச் சொல்லவோ அல்லது பொறுக்கிச் செல்லவா கூடாது. அப்படி செய்தால் தேசிய வெடிமருந்து சட்டத்திற்கு அவர்கள் கைது செய்யப்படலாம் என தெரிவித்தனர். ஆனால் இப்பகுதியில் உள்ள மக்கள் அறியாமையின் காரணமாக இதை எடுத்துச் செல்வதாலும், இதை வைத்திருக்கக் கூடாது என்று தெரியாததால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விழிப்புணர்வு அவசியம் 


ராணுவ வீரர்கள் இதுபோன்று சிறிய ரி ராக்கெட் லாஞ்சல்களை, வைத்து பயிற்சி மேற்கொள்ளும் பொழுது சில சமயம் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்திருக்கிறது. பயிற்சி முடிந்த பிறகு சில காலம் அப்பகுதியில் ராணுவ வீரர்கள் யாரும் வரமாட்டார்கள் என்பதால், ஆடு, மாடு மேய்க்க செல்பவர்கள் கீழே கிடைக்கும் பொருட்களை சேகரித்து பழைய இரும்பு கடையில் போட்டு பணம் பார்ப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே இப்பகுதி மக்களுக்கு , வெடிக்கக் கூடிய அபாயம் இருக்கும் பொருள் என்பதால் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து அப்பகுதி மக்களுக்கு, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.