குடியிருப்புகள் மிகுந்த வளசரவாக்கம் பகுதியில் வீடு புகுந்து ஒரு துணை நடிகை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைப்பு. சென்னை வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் பகுதியில் சினிமா துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் அந்த நடிகை வீட்டில் இருந்தபோது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த நடிகை வெளியில் சென்று பார்த்த போது அங்கு 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை யார் என்று கேட்பதற்குள் இருவரும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் இருவரும் அந்த நடிகை வீட்டில் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். இதன் பிறகு அவர் அணிந்திருந்த 4½ பவுன் நகையையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதுமட்டுமின்றி அப்போது அவர்கள் அந்த நடிகையை ஆபாசமாக செல்போனில் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நடிகை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.



அவர் அளித்த புகாரில், அடையாளம் தெரியாத இருவர் என்னை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததுடன், பணம், நகையையும் கொள்ளையடித்து சென்று விட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உதவி கமி‌ஷனர் கலியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குருஸ், சப்-இன்ஸ் பெக்டர் மகாராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக விசாரித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஏதாவது பதிவாகி உள்ளதா என்று தேடிப்பார்த்துள்ளனர்.


அதன்மூலம் அந்த நடிகையின் வீட்டுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் 2 பேர் செல்வது தெரியவந்தது. வீட்டு அருகில் கேமராக்கள் இல்லாத நிலையில் சற்று தூரத்தில் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இருவரின் உருவமும் பதிவாகி இருந்தது. ராமாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் முதலில் அடையாளம் காணப்பட்டார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரும் கண்ணதாசனும் சேர்ந்து நடிகையின் வீட்டுக்கு சென்று கத்தி முனையில் கொள்ளையடித்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன்மூலம் போலீசார் இரு குற்றவாளிகளையும் கைது செய்தனர்.



பிடிபட்ட இருவரிடமும் போலீசார் அதிரடியாக நடத்திய விசாரணையில், அதிரடி திருப்பம் ஏற்பட்டது. கொள்ளை வழக்காக ஆரம்பித்த இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை வழக்காக மாறியது. துணை நடிகை தனியாக இருப்பதை அறிந்து கொண்ட கண்ணதாசனும், செல்வக்குமாரும் அவரது வீட்டுக்குச் சென்று கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கின்றனர். இதன்படி அன்று இரவு இருவரும் துணை நடிகையின் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்ததுடன் கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். கைதான செல்வக்குமார் என்பவரது சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி என்று கூறியுள்ளார்.


இவர் சென்னை அயப்பாக்கம் பகுதியில் தங்கியிருந்து பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கைதான இன்னொரு வாலிபரான கண்ணதாசன் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இருவர் மீதும் 376 ஐ.பி.சி. மற்றும் 397 ஐ.பி.சி. ஆகிய 2 சட்டப்பிரிவுகள் போடப்பட்டு உள்ளன. இதில் 376 சட்டப்பிரிவு கத்திமுனையில் மிரட்டி வழிப்பறி மற்றும் கற்பழிப்பு குற்றத்துக்காக போடப்பட்டு உள்ளது, பிரிவு 397 வழிப்பறி குற்றத்திற்காக போடப்பட்டுள்ளது. இருவரும் அந்த நடிகையிடம் இருந்து பறித்துச் சென்ற நகை, பணத்தை போலீசார் மீட்டுள்ளனர். அதன் பிறகு இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.