சென்னையில் 12 ஆண்டுகளாக நெருங்கிப் பழகிய பெண்ணை ஏமாற்றி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நபரை கைது செய்த காவல்துறை.

 

12 ஆண்டுகளாக நெருங்கிப் பழகி

 

சென்னை குரோம்பேட்டை, ஆர்பிஐ காலனி பகுதியை சேர்ந்தவர் அமீர் சையத் (34). இவர் மீது தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில் அமீர் சையத் தன்னை 12 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னிடம் உறவு வைத்துக் கொண்டு ரூபாய் 20 லட்சம் மற்றும் 25 சவரன் நகையும் மோசடியாக பெற்றுக்கொண்டதாகவும், கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட தன்னை திருமணம் செய்ய மறுத்து வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்து வருவதை கேள்விப்பட்டு தான் அமீர் சையத் மற்றும் அவரது பெற்றோர்களிடம் கேட்ட போது தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்திருந்தார்.

 

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

 

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அமீர் சையத் ஐதராபாத் சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு துபாய் சென்று விட்டதாக தெரியவரவே போலீஸார் அமீர் சையத்துக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்தனர். அதன் பிறகு கடந்த 26.7.2023 அன்று துபாயிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய அமீர் சையத்தை குடியுரிமை அதிகாரிகள் பிடித்து வைத்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 

ஆந்திராவில் பதுங்கி இருந்த நபர்

 

அதன்படி தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர்.  ஆனால் அமீர் சையத் விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்காமல் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் உயர்நீதி மன்றத்தில் அம்மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து தலைமறைவான அவர் தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அருகில் டோலிசோக் என்ற இடத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படையினர் ஐதராபாத் சென்று அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை செய்து, விசாரணைக்கு பிறகு கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி புழல் சிறையில் அடைத்தனர்.