சென்னையில் போதைக்கு அடிமையாக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பள்ளி சிறுமி வழக்கில், உடந்தையாக இருந்த 3 கல்லூரி மாணவிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சிறுமிக்கு போதையை கற்றுக்கொடுத்து குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததே இந்த கல்லூரி மாணவிகள்தான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


நடந்தது என்ன?


சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த  13 வயது சிறுமி ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி  பள்ளி அருகேயுள்ளபானிபூரி கடையில் அடிக்கடி பானிபூரி சாப்பிட்டுள்ளார். அதே கடையில் பல் மருத்துவம் படித்து வரும் 20 வயதான வசந்த் க்ரிஷ் என்ற இளைஞரும் பானிபூரி சாப்பிட்டுள்ளார். இந்த பானிபூரி கடையால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த நட்பு காதலாகவும் மாறியுள்ளது. பள்ளி சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதேபோல் தான்வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். தனக்கு பழக்கமான கஞ்சா மற்றும் ஹூக்கா போன்ற போதையையும் சிறுமிக்கு அறிமுகப்படுத்தி அடிமையாக்கியுள்ளனர்.  


தொடர்ந்து போதைப்பொருளை கொடுத்து நாள் முழுவதும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் வசந்த்.  ஒரு கட்டத்தில் போதைக்கு அடிமையான சிறுமி போதைப்பொருளுக்காக ஏங்கியுள்ளார்.தனக்கு போதை வேண்டுமென வசந்தை தொந்தரவு செய்துள்ளார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய வசந்த் தனது நான்கு நண்பர்களையும் கூட்டு சேர்த்துள்ளார். அதன்படி சினிமா துணை நடிகர் சதீஷ் (22), கல்லூரி மாணவர் விஷால் (19), பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பிரசன்னா (32) ஆகியோரும் வசந்த் வீட்டுக்கு வந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பள்ளி இல்லாத நாட்களிலும் கூட சிறுமியை வீட்டுக்கு வரவழைத்து போதையை கொடுத்து கொடுமை தொடர்ந்துள்ளது.


கைது..


சிறுமியின் பெற்றோர் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மாணவியிடம் தகவலைக் கேட்டறிந்த அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வசந்த் க்ரிஷ், சதீஷ்,  விஷால்,பிரசன்னா ஆகியோரை கூண்டோடு கைது செய்தனர். 4 பிரிவுகளில் கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து மாணவியின் வீடியோவும், செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. 


கல்லூரி மாணவிகள்..


கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் இந்த வழக்கில் 3 கல்லூரி மாணவிகளுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.  சிறுமிக்கு போதையை கற்றுக்கொடுத்து குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததே இந்த கல்லூரி மாணவிகள்தான் என போலீசார் தெரிவித்துள்ளனர். முக்கிய குற்றவாளியான வசந்தின் தோழி ஒருவரே பள்ளி மாணவிக்கு ஹூக்கா போதையை அறிமுகம் செய்து அடிமையாக்கியுள்ளார். அவரோடு சேர்ந்து மேலும் இரு தோழிகளும் நள்ளிரவில் பள்ளி மாணவியை அழைத்துச் செல்வது, போதைக் கொடுப்பது என வேலையைப் பார்த்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள 3 கல்லூரி மாணவிகளையும்  போலீசார் தேடி வருகின்றனர்.