செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வரதன். இவரது மகன் மனோகரன் (32). பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவர் தனது சகோதர்களோடு, சேர்ந்து சொந்தமாக ஜேசிபி இயந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் கொண்டமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளல் வெட்டி படுகொலை செய்ய முற்பட்டுள்ளனர்.



 

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனோகரன் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி பள்ளிக்கூடத் தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்பக்கமாக சென்று பதுங்கி உள்ளார் அவரை விடாமல் துரத்திய அந்த மருமகம்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இந்தக் கொலை சம்பவம் தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் மனோகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த கொலை குறித்து மறைமலைநகர் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் தலைமையில் ஏழு பேர் கொண்ட இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் .

 

இந்நிலையில் செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி பகுதியில் தங்கி இருந்த அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (26), பூபாலன் (26), அருண்குமார்(28), சிறுகுன்றம் பகுதியைச் சேர்ந்த அபினேஷ் (24) மற்றும் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (26) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் நேற்று மடக்கி பிடித்து மறைமலைநகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நேரம் கொண்டனர். அந்த விசாரணையில், கூடுவாஞ்சேரியில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி, வரும் அஜித்குமாரின் அக்கா சங்கீதாவுக்கும் மனோகருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், கடந்து 5 நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடும் பொழுது, ஏற்பட்ட வாய் தகரில் நண்பர்கள் மத்தியில் பூபாலனை மனோகரன் தாக்கியதாகவும் தெரிகிறது.  மேலும் கொண்டமங்கலம், தர்காஸ், அனுமந்தபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் கஞ்சா விற்பனை பற்றி, மனோகரன் மறைமலைநகர் போலீசார் தகவல் தெரிவித்து வந்துள்ளார்.



 

இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த கோவிந்தாபுரம் அருகே மது போதையில் மனோகரனை கொலை செய்ய திட்டமிட்டு மனோகரனை சுற்றி வளைத்து படுகொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களை கைப்பற்றி மறைமலைநகர் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.