கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் மக்புல் (22). கல்பாக்கம் அடுத்த நரசங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் கல்பாக்கம் அணு மின் நிலைய ஊழியர். இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் நிஷாந்தி (20) . இவருக்கும், மக்புலுக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. கடந்த சில மாதத்துக்கு முன்பு மக்புல், நிஷாந்தியை கர்நாடகாவுக்கு அழைத்து சென்று, திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த பிறகு நிஷாந்தியை சரிவர கவனிக்காமல் இருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜேந்திரன்,  மகள் மற்றும் மருமகனை அணுபுரத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட ஊழியர் குடியிருப்பில் தங்க வைத்தார். கர்நாடகாவில் இருந்து இங்கு வந்த மருமகன் வேலை இல்லாமல் இருப்பதை பார்த்து சில இடங்களில் மாமனார் வேலைக்கும் ஏற்பாடு செய்துள்ளார். இருந்தும் தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் மக்புல் இருந்துள்ளார்.

 



இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் நிஷாந்தியின் தாய் இந்திராவுக்கு உடல்நிலை பாதித்தது. இதனால் அவர், கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை, நிஷாந்தி உடன் இருந்து பார்த்து கொண்டார். அப்போது, மக்புல், நரசங்குப்பத்தில் உள்ள ராஜேந்திரன் வீட்டில் தங்கினார். நேற்று முன்தினம் மாலை மக்புல் தங்கிய வீட்டில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, தலை மற்றும் கை ஆகிய பகுதிகளில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் மக்புல் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சதுரங்கப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார் என மாமனார் ராஜேந்திரன் கதறி அழுதுள்ளார். காவல்துறை நடத்திய விசாரணையில் ராஜேந்திரன், மக்புலை செய்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கர்நாடகவில் எனது மகள் மிகவும் வறுமையில் வாழ்ந்தாள். இதை எனது மகள் என்னிடம் தெரிவித்ததால், நானும் அவர்களை இங்கு வரவழைத்து, எனக்கு வழங்கப்பட்ட அணுமின் நிலைய குடியிருப்பில் தங்க வைத்தேன். ஆனால், அப்போதும் மக்புல் வேலைக்கு செல்லாமல் பல்வேறு இடங்களில் திருட ஆரம்பித்தார்.



 

 இது சம்பந்தமாக இங்குள்ள பலர் என்னிடம் கூறியபோது எனக்கு அவமானம் ஏற்பட்டது. இதையடுத்து நான் பலமுறை, மக்புலுக்கு அறிவுரை கூறினேன். ஆனால் அவர், அதை கேட்கவில்லை. இதனால் நான் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளானேன். நேற்று முன்தினம் நரசங்குப்பத்தில் உள்ள எனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தங்கிய மக்புலை பார்க்க சென்றேன். அப்போது அங்கிருந்த மக்புலை, சுத்தியலால் அடித்து, அரிவாள் மனையால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றேன் என வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருமகனே மாமனார் சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.