சென்னையை அடுத்து அமைந்துள்ளது மாதவரம் பால்பண்ணை. இங்குள்ள 4வது யூனிட் பகுதியில் வசித்து வந்தவர் மோகன். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவிக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், அவர் மோகனை பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மோகனின் அண்ணன் செந்தில் மணலியில் வசித்து வருகிறார்.


மதுவிருந்து


அவர் தனியாக வசித்து வரும் தனது தம்பியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மோகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மோகன் சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்ட செந்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.




போலீசார் விசாரணையில் மோகன் உயிரிழப்பதற்கு முதல்நாள் இரவு அவரது நண்பர்கள் 4 பேர் அவரது வீட்டிற்கு வந்து சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து, மோகன் வீட்டிற்கு கடைசியாக வந்து சென்ற திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெபா என்ற ஜெயக்குமார் ( வயது 34) மற்றும் மோகன் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 38) ஆகியோரை அழைத்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.


அடித்துக்கொன்ற நண்பர்கள்


இதனால், சந்தேகம் வலுத்த போலீசார் அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, மோகன் ஜெயக்குமார், பிரபு மற்றும் மேலும் 2 நண்பர்களை தனது வீட்டிற்கு மது அருந்த அழைத்துள்ளார் என்றும், மது போதையில் பிரபு மோகனின் மனைவியை பற்றி தவறாக பேசியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மோகன் பிரபுவுடன் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து, நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து மதுபோதையில் மோகனை தாக்கியுள்ளனர்.




நண்பர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மோகன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மோகன் இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நான்கு பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். இந்த நிலையில்தான், போலீசார் விசாரணையில் ஜெயக்குமாரும், பிரபுவும் சிக்கியுள்ளனர். இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மோகன் உயிரிழப்புக்கு காரணமாகிய மற்ற இருவரும் தலைமறைவாக உள்ளனர். மேலும், தப்பியோடிய மற்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


நண்பர்களே மதுபோதையில் நண்பனை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாதவரம் பால்பண்ணை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண