செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த பகவத்சிங் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சசிகலா வயது 37. இவரது வீட்டில் தேனி மாவட்டம் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் இவரது மனைவி பத்மபிரியா வயது 27 ஆகியோர் சசிகலா வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்கள். சுரேஷ் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பத்மப்பிரியா மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே மாதம் சசிகலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பத்மபிரியா சசிகலா வீட்டில் இருந்த பீரோவில் ஏழு சவரன் தங்க நகையை திருடிவிட்டு தலைமறைவாகி விட்டார்.

 

இதுகுறித்து சசிகலா மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில பத்மப்பிரியா ஆறு மாதத்திற்கு பிறகு மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை பகுதியில் வாடகை வீட்டில் இருந்தது சசிகலாவிற்கு தெரிய வந்தது. உடனடியாக சசிகலா மறைமலைநகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

 

தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் கொண்ட குழு சத்தம் இல்லாமல் பத்மப்பிரியாவை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து பத்மப்பிரியாவிடம் விசாரணை செய்ததில் சசிகலா வீட்டில் ஏழு சவரன் தங்க நகை திருடியதை ஒப்புக்கொண்டார். ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதால் நிறுவனத்திற்கு ஏற்றார் போல் உடை மற்றும் அழகு சாதன பொருட்கள் வாங்குவதற்கு போதிய பணம் இல்லாததால் 7 சவரன் தங்க நகையை திருடி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பத்மபிரியாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஏழு சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்தனர்.