செங்கல்பட்டு ( Chengalpattu News )  மாவட்டம் கல்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்றபோது அரசு பேருந்து மோதியதில் 4ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

சுதந்திர தின விழா ( independence day 2023 ) 

 

இந்தியா முழுவதும் 77 ஆவது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு  அரசு அலுவலகங்கள் பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் பல்வேறு அமைப்புகள் சார்பில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விடுமுறை தினம் என்றாலும், மாணவர்கள் பள்ளிக்குச் சென்று சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர். 

 

செங்கல்பட்டு -- கல்பாக்கம்

 

அந்தவகையில் , செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுசக்தி ஊழியர்கள் குடியிருப்பை சேர்ந்த சுஜாதா என்பவரின் மகன் ஷரவன். இவர் அணுசக்தி மத்திய பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சுதந்திர நாள் நிகழ்ச்சியையொட்டி சைக்கிளில் பள்ளிக்கு சென்ற மாணவன் விழா முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் வந்த சகமாணவர்களின் பெற்றோர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

 

உயிரிழந்த பள்ளி மாணவன்

 

இதையடுத்து, கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து கல்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுதந்திர தினத்தன்று பள்ளிக்குச் சென்ற சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.