செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில், கஞ்சா விற்பனை செய்வதில் போட்டி காரணமாக இருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


போதை பொருட்கள் விற்பனை ஜோர்


சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை கொடிகட்டி பறந்து வருகிறது. அந்த வகையில் தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. 


பல்வேறு குட்டி ரவுடிகள் இதுபோன்ற கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவப்பொழுது கஞ்சா விற்பனையில் ஈடுபடும் தரப்பிற்கு இடையே மோதல் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. இவற்றை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. 


குட்டி ரவுடிகளின் தொடர் அட்டகாசம் 


இந்தநிலையில் நேற்று நள்ளிரவு வண்டலூர் அடுத்த ஓட்டேரி காவல் நிலையத்தில், ஹரி என்ற ஆட்டோ ஓட்டுனர் காவல் நிலையத்தில் நேரடியாக வந்து பரபரப்பு  புகார் ஒன்றை அளித்தார். நள்ளிரவில் இரண்டு இளைஞர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்றதாகவும், இரண்டு இளைஞர்களையும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதாகவும் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் தாம்பரம் அருகே பெருங்களத்தூர், குண்டுமேடு சுடுகாடு மற்றும் உரக்கிடங்கு அருகே, ஆட்டோ ஓட்டுனர் ஹரி அண்ணாமலை என்கிற ஜில்லா மற்றும் தமிழரசன் ஆகிய இருவரை அழைத்துச் சென்றுள்ளார்.


சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 


அங்கு ஒரு சில இளைஞர்கள் இருந்ததாக கூறப்படுகிறது, அங்கிருந்த இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென அங்கிருந்து சிலர் தமிழரசன் மற்றும் அண்ணாமலை என்கிற ஜில்லா ஆகிய இருவரையும் வெட்டி கொலை செய்துள்ளது. இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் ஹரி கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி ?


மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலால் கொலை நடைபெற்றிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொலை சம்பவத்தில் சோனை என்கிற கோபாலகிருஷ்ணன் கோஷ்டியினர் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். சென்னை புறநகரில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலால் இருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா விற்பனையால் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சென்னை புறநகர் பகுதியில் கண்காணிப்பு தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்


இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது: முதற்கட்டமாக உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். முதற்கட்ட விசாரணையில், ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.