இலங்கையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரை வழியாக தங்கம் கடத்திவரப்படுவதாகத் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, இந்திய கடற்படையினருடன் இணைந்து தேசிய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் அதிக திறன்கொண்ட இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கப்பல்கள் மூலம் தமிழகக் கடலோர எல்லை, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.




இந்த நிலையில், நேற்று அதிகாலை அதிக திறன்கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு ஒன்று இலங்கை சர்வதேச எல்லையிலிருந்து தமிழகம் நோக்கி வந்திருக்கிறது. ரேடார் மூலம் அந்தப் படகைக் கண்டறிந்த இந்திய கடற்படையினர், சிக்னலைப் பின்தொடர்ந்து அந்த நாட்டுப்படகை விரட்டிச் சென்றிருக்கின்றனர்.




இந்திய கடற்படையினர் பின்தொடர்ந்து விரட்டி வருவதை தெரிந்துகொண்டு, நாட்டுப்படகிலிருந்து மர்ம மூட்டை ஒன்றை, அதில் இருந்தவர்கள் கடலில் வீசிவிட்டு தப்பிக்க முயன்றனர். அதையடுத்து, சுமார் மூன்று நாட்டிக்கல் மைல் தூரம் விரட்டிச் சென்று, அந்த நாட்டுப்படகை சுற்றிவளைத்தனர். பின்னர் அந்தப் படகிலிருந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை கரைக்குக் கொண்டுவந்து விசாரணை நடத்தினர்.




அவர்கள் கடலில் மூட்டை ஒன்றை வீசுவதைப் பார்த்திருந்த இந்தியக் கடற்படையினர், அது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அது போன்று நாங்கள் எதுவும் கடலில் வீசவில்லை எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. முன்னுக்குப் பின் முரணான பதிலால், அவர்கள் இலங்கையிலிருந்து தங்கக் கட்டிகள் கடத்தி வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது எனச் சந்தேகித்த அதிகாரிகள், அவர்கள் கடலில் வீசிய மூட்டையைத் தேடும் பணியில் இறங்கினர். இதற்காக ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம், நேற்று முதல் அந்த மூட்டையை அதிகாரிகள் தேடிவந்தனர்.


இந்நிலையில் இந்திய கடலோர காவல்படை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் சங்குகுளி தொழிலாளர்கள் மூலம் கடலில் வீசப்பட்ட தங்கமூட்டையை மீட்டனர். கடலில் கிடந்த 12 கிலோ தங்கத்தை மீட்டு பிடிப்பட்டவர்களிடம் யாரிடம் இருந்து தங்கம் கொண்டு  வரப்பட்டது, இங்கு யாருக்கு கொண்டு வரப்பட்டது. இதில் வேறு யாரும் ஈடுப்பட்டு உள்ளார்களா என தீவிர விசாரணையை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.