விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் கட்டும் பணியில் ஈடுபட்ட 8ஆம் வகுப்பு படிக்கும்  13 வயது தினேஷ் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அச்சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக 1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் பொன்குமார் என்பவரது இல்ல திருமண விழா நடைப்பெற்றது. இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அவரை வரவேற்க திமுக சார்பில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள் அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் பணிகளில் 10 க்கும் மேற்ப்பட்டவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.


அதில் விழுப்புரம் ரஹீம் லே- அவுட் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகனான விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயதே ஆன தினேஷ் என்ற சிறுவனும் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அச்சாலையில் மின் பகிர்மான கழகம் செயல்ப்பட்டு வருவதால் அங்கு அதிக அளவிலான உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. அப்போது பணியில் ஈடுப்பட்டு இருந்த சிறுவன் நடவு செய்த கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உராசியதால் மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் தூக்கி வீசப்பட்டான்.


படுகாயம் அடைந்த சிறுவனை உடன் பணி புரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது, சனிக்கிழமை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.


இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி தொடர்புகொண்ட போது, மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தெரியும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும், விழா ஏற்பாட்டாளர் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 1.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


இந்த சாலை நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இருப்பதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், கொடி கம்பங்களை நடுவதற்கு தடையில்லா சான்றிதழுக்கான விண்ணப்பம் கலெக்டருக்கு அனுப்பப்பட வேண்டும். பின்னர் அவர் அதை நகராட்சிக்கு கட்டணம் செலுத்துவதற்காக அனுப்புவார். ஆனால் எந்த விண்ணப்பமும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.


கடந்த காலத்தில் ஃப்ளெக்ஸ் பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களால் ஏற்பட்ட விபத்துகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நிகழ்ச்சிகளில் ஆடம்பரத்தை தவிர்க்குமாறு  கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். 2019 ஆம் ஆண்டில், சென்னையில் அதிமுக ஃப்ளெக்ஸ் பேனர் மோதியதில் ஒரு இளம் பெண் தனது ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து இறந்தார். அதே ஆண்டு கோவையில் ஸ்கூட்டரில் சென்ற மற்றொரு பெண், அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சுபஸ்ரீக்கு எழுப்பப்பட்ட நியாயம்... தினேஷிற்கு மறைக்கப்பட்டது ஏன்? ஆட்சி மாறினாலும் மாறாத காட்சி!