வேலூரில் நகர் பகுதியில் தனியார் ரெயில் தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் கடைகளில் ஐ.ஆர்.சி.டி.சி. சாப்ட்வேருக்குள் (இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் மென்பொருள்) சென்று விரைவாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து டிக்கெட் விலையை ரூபாய் 200 முதல் ரூபாய் 500 வரை கூடுதல் விலைக்கு விற்பதாக ரெயில் பாதுகாப்பு படை சீனியர் டிவிஷனல் செக்யூரிட்டி கமிஷனர் ராமகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடுத்து ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கடந்த ஜூலை மாதம் 7 தேதி திருவண்ணாமலை மாவட்ட ரெயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் துணை ஆய்வாளர் ஆதித்யாகுப்தா மற்றும் காவல்துறையினர் வேலூரில் சோதனை நடத்தினர்.


 




அப்போது முறைகேடாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்த 5 கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். அதில் 2 கடைகளில் சட்டவிரோதமான மென்பொருளை பயன்படுத்தி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அந்த மென்பொருளை விற்றது யார் என்று ரெயில்வே பாதுகாப்பு படை சைபர் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் இந்த சட்டவிரோத மென்பொருளை ( சாப்ட்வேர்) விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில் பாதுகாப்பு படை ஆய்வாளர் அருண்குமார், திருவண்ணாமலை மாவட்ட ரெயில்வே பாதுகாப்பு படை துணை ஆய்வாளர் ஆதித்யாகுப்தா, சைபர் செல் துணை ஆய்வாளர் அரிகிருஷ்ணன் உள்பட 8 நபர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் தனிப்படை காவல்துறையினர் சட்ட விரோத மென்பொருளை விற்பனை செய்த நபரை பிடிக்க கடந்த 9-ந் தேதி பீகாருக்கு சென்றதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வட்டாரத்தில் கூறியது; 


நாங்கள் பீகாருக்கு சென்றோம் அங்கு சைலேஷ் யாதவிடம் இருந்து தட்கல் சாப்ட்வேரை ஆல் இன் என்ற 10 சட்டவிரோதமான இணையதள மென்பொருள் இருந்தது. இதனை அவர் இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் மென்பொருளுக்குள் சென்று டிக்கெட் முன் பதிவு செய்வது போல் மென்பொருளை உருவாக்கியவரிடம் இருந்து வாங்கி தன்னுடைய இணையதளத்தில் அறிமுகப்படுத்தி தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் சுமார் 3485 பேரிடம் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 வரை விற்று உள்ளார். இந்த 10 மென்பொருளின் மூலம் கடந்த 18 மாதத்தில் மட்டும் ரூபாய் 9820946 விற்பனை செய்துள்ளார். இதில் மென்பொருளை உருவாக்கி தந்தவர்களுக்கு போக 30 சதவீதம் அவருக்கு கமிஷனாக கிடைத்து. 


 




சைலேஷ் யாதவிற்கு இதன் மூலம் கடந்த மாதம் மட்டும் 2 லட்சத்து 70 ஆயிரம் கிடைத்துள்ளது. மேலும் இந்த சட்டவிரோத மென்பொருள் மூலம் ஒரு நாளைக்கு நாடு முழுவதும் சுமார் 7 ஆயிரம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரத்து 460 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 18 மாதங்களில் இந்த மென்பொருள் மூலம் எடுக்கப்பட்ட ரெயில் டிக்கெட்டுகளின் மதிப்பு சுமார் 56 கோடியே 45 லட்சத்து 70 ஆயிரம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சைலேஷ் யாதவ் இந்த செயலில் ஈடுபடுவதற்கு 13 செல்போன் எண்களை பயன்படுத்தி உள்ளாராம். மேலும் அவரிடம் இருந்து லேப்டாப் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.