அதிமுகவின் அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன், B.E., (Hons) அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 






எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துகளை பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருந்த நிலையில் அதிமுகவின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த நிலையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் என்று ஓபிஎஸ் அறிவித்த சிறிது நேரத்திலேயே அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஈபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், “ கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. பண்ருட்டி S. ராமச்சந்திரன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.






கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.