ஒடிசா நடிகை ஒருவரை சகநடிகரின் மனைவி ஒருவர் நடுரோட்டில் வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


பிரபல ஒடிசா நடிகை பிரக்ருதி மிஸ்ரா. அண்மையில் இவர் பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடிகர் தன்மெ மொஹெந்தியுடன் இணைந்து நடித்து இருந்தார். இந்த நிலையில் இவரும், நடிகர் தன்மெ மொஹெந்தியும் காரில் புபனேஷ்வர் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.


அப்போது அந்தக்காரை வழிமறித்த தன்மெ மொஹெந்தியின் மனைவி, அவர்கள் தவறான உறவு வைத்துள்ளார்கள் என்று கருதி அடித்து உதைத்தார். அத்தோடு காரில் இருந்த நடிகை மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து இழுத்தார். இதில் திக்குமுக்காடி போன மிஸ்ரா அங்கிருந்து ஓடினார். இருந்தாலும் அவரை விடாத திருப்தி நடுரோட்டில் அவரை விரட்டி, விரட்டி அடித்தார். ஒரு வழியாக தப்பிய மிஸ்ரா, அங்கிருந்த ஆட்டோவில் ஏறி ஓடினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.






இந்த விவகாரம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் மிஸ்ரா, “பெண்கள் முன்னேற்றத்திற்காக வேலை செய்யும் போது, களத்தில் எங்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுகிறது. அவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.. இதை மாற்றுவதற்கான பெரிய இலக்கை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேன். இதை சார்ந்து வேலை செய்பவர்கள் இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இன்னும் என்னுடைய வேலையை முழுமையாக முடிக்கவில்லை.






இறுதியாக ‘பெண்கள் முன்னேற்றம்’ என்ற அந்த இலக்கை அடைய நாம் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கிறது” என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் திருப்தி நடந்து கொண்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக மிஸ்ராவின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல திருப்தியும் தங்களது வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மிஸ்ரா நுழைவதாக கூறி புகார் அளித்துள்ளார்.