அசாம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் 30 வயதான பாதிக்கப்பட்ட பெண், தெகியாஜூகியில் உள்ள ராக்யாஸ்மாரி என்ற இடத்தில் உள்ள ஒரு சாலையில் வேலை முடிந்து தனது வீடு நோக்கி சென்றுள்ளார். 


பெண் மீது ஆசிட் வீச்சு:


அப்போது, அருகிலிருந்த தேயிலை தோட்டத்தில் இருந்து ஒரு இளைஞன் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு வழி மறித்துள்ளார். அந்த பெண் வாகனத்தை நிறுத்தாததால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பெண்ணின் மீது ஆசிட் வீசியுள்ளார். இதனால் அந்த பெண் கீழே விழுந்துள்ளார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அந்த இளைஞரிடம் இருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தபோது, அந்த இளைஞர் விடாது அந்த பெண்ணை துரத்தி அவரது உடல் முழுவதும் ஆசிட் வீசியுள்ளார். 


இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில், “தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ததோடு, தாக்குதலுக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தி வருகின்றோம்” என தெரிவித்தார். 


கருத்து வேறுபாடு:


முதற்கட்ட விசாரணையில், ” குற்ற சாட்டப்பட்ட நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள். ஏற்கனவே திருமணமான இளைஞருக்கும்,   திருமணமாகாத அந்த பெண்ணுக்கும் இடையில் நீண்ட நாட்களாக தொடர்பு இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்குள்ளும் பணம் தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த இளைஞர் இந்த கொடூர செயலை செய்திருக்கலாம் என்று சோனிட்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் சுஷாந்தா பிஸ்வா சர்மா கூறினார்.


தேஜ்பூர் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், பெண்ணின் மீது ஆசிட் வீசிய தொழிலதிபர் வட்சுகர் நேற்று கைது செய்யப்பட்டார், இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கையில், தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு கிட்டத்தட்ட 15% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கழுத்து, தலை, தோள்பட்டை மற்றும் கைகளின் பாகங்கள் எரிந்துள்ளன. காயங்கள் பெரிதாக இல்லை, சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர். 


பெண்களுக்கு எதிரான வன்முறைகள்: 


கடந்தாண்டு தேசிய தலைநகர் டெல்லியில் தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நாட்டின் பாதுகாப்பற்ற பெருநகரமாக டெல்லி திகழ்வதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 13,892 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 40% அதிகமாகும். அந்த ஆண்டு, 9,782 வழக்குகள் பதிவாகியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் 19 பெருநகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் 32.20 சதவீதம் ஆகும். 


டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.


கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது. 


டெல்லியில் 2021 ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டில், டெல்லியில் பெண்களுக்கு எதிராக 13,982 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 19 பெருநகரங்களில் உள்ள மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 43,414 ஆகும்.


2021 இல், தேசிய தலைநகரில் 136 வரதட்சணை மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 19 பெருநகரங்களில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 36.26 சதவீதமாகும். அனைத்து பெருநகரங்களிலும் மொத்தம் 8,664 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில், பெண்கள் கடத்தல் மற்றும் கடத்தல் தொடர்பாக 3,948 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன.


2021 ஆம் ஆண்டில், போக்சோ சட்டத்தின் கீழ் 1,357 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டில் 833 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது பெருநகரங்களில் மிக அதிகமாகும்.