'காதலுக்கு கண் இல்லை' என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனெனில் அது எல்லாவற்றையும் பார்க்கிறது ஆனால் கவலைப்படுவதில்லை. கண்மூடித்தனமான காதல் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு அண்மையில் அசாம் மாநிலத்தில் நடந்த முட்டாள்தனமான சம்பவம் சாட்சி. அசாம் மாநிலம் சுவால்குச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது காதலை வினோதமான முறையில் நிரூபித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் தன் காதலனின் எச்ஐவி-பாசிட்டிவ் ரத்தத்தைப் பெற்று, அவரது உடலில் ஊசி போட்டு செலுத்திக்கொண்டு, தன் காதல் உண்மை என்பதை நிரூபித்துள்ளார். 


அந்த மாநிலத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்குக் கிடைத்த  ஆதாரத்தின்படி, ஹெச் ஐ வி பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த சிறுவன் ஹாஜோவில் உள்ள சடோலாவைச் சேர்ந்தவர். ஃபேஸ்புக் மூலம் 15 வயதான இந்தச் சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். மற்றும் நாளடைவில் அவர்களது பிணைப்பு பிரிக்க முடியாத அளவுக்குச் சென்றுள்ளது. விரைவில், இந்த ஜோடியால் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.




இணையத்தில் வெளியாகும் தகவல்களின்படி, ”சிறுமி தனது வீட்டை விட்டு வெளியேறி, பல முறை அந்த சிறுவனைச் சென்று சந்தித்திருக்கிறார்.ஒவ்வொரு முறையும் அவர் தப்பிச் செல்லும்போது அவருடைய பெற்றோரால் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். இருப்பினும், இந்த முறை அவர் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இப்படியான செயலில் ஈடுபட்டு  அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார்.


அவர் எச்.ஐ.வி-பாசிட்டிவ் காதலனிடமிருந்து ஒரு ஊசி மூலம் இரத்தத்தைப் பிரித்தெடுத்து, தனக்குத்தானே செலுத்திக் கொண்டு தனது உறவினர்களிடம் தன் காதலை நிரூபித்துள்ளார். காதலுக்காக இப்படியான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது பலரது விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது.


முன்னதாக, அசாம் மாநிலத்தில் அண்மையில் மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.அசாமில் அதிகப்படியான மழை காரணமாக அந்த மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. 32 மாவட்டங்களில் உள்ள 4,941 கிராமங்களில் 54.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 845 நிவாரண முகாம்கள் மற்றும் 1025 நிவாரண விநியோக மையங்கள் மாவட்ட நிர்வாகங்களால் அமைக்கப்பட்டன, அங்கு 2.71 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தஞ்சமடைந்தனர். கோபிலி, திசாங் மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளில் பல இடங்களில் அபாய அளவை தாண்டி நீர் பெருக்கெடுத்ததை அடுத்து இதுவரையில் 99,026 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்தன.முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் ரயிலில் நாகோன் பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார். வெள்ளம் பாதித்த பல்வேறு பகுதிகளை படகின் மூலம் பார்வையிட்ட அவர், கம்பூர் கல்லூரி மற்றும் ராஹா மேல்நிலைப் பள்ளியில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களை சந்தித்து பேசினார்.அதே போல மோரிகான் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து பேசினார்.