ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை:


குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு, பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் ஆசிரமத்தில்  சூரத்தை சேர்ந்த பெண்ணை,  பாலியல் வன்கொடுமை செய்த புகாரில்  2013ம் ஆண்டு ஆசராம் பாபு மீது வழக்கு தொடரப்பட்டது. 10 ஆண்டுகளாக  நடைபெற்ற வழக்கில்  குஜராத் மாநிலம் காந்தி  நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த, சாமியாரின் மனைவி மற்றும் மகன் உட்பட 5 பேருக்கு எதிராக, ஆதாராங்கள் இல்லை என நீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.






16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:


அகமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு,  ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம் மற்றும்  அறக்கட்டளைகள் உள்ளன. அங்குள்ள பெண் சீடர்கள் இடையே, சாமியார் ஆசாராம் பாபு அத்துமீறி நடந்து பாலியல் தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் முடிவில்,  2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.


பெண் சீடருக்கு பாலியல் தொல்லை:


இதனிடையே, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் 2001 முதல் 2006 வரை தான் இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம் பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சூரத்தைச் சேர்ந்த பெண் சீடர், அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா காவல் நிலையத்தில் கடந்த 2013ம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.


இது தொடர்பான வழக்கை குஜராத்தின் காந்தி நகரில் உள்ள நீதிமன்றம் விசாரித்து வந்தது. பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு, அவரது மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் பக்தைள் என கூறிக்கொண்ட 4 பெண்களும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என நேற்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது. அதேநேரம், குற்றம்சாட்டப்பட்ட சாமியாரின் மனைவி, மகன் மற்றும்  4 பெண் பக்தைகளுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறிய அந்த 6 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைதொடர்ந்து, இன்று ஆசாராம் பாபுவுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.