பட்டியலின மக்களுக்கு எதிராக அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்கு தொடரப்பட்டது. சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுன் மீது IPC சட்டப்பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தைத் தூண்டுதல்) 153(எ)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலைத் தூண்டுதல்) 505(1) (பி) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2) (மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராகப் பேசுவது, நடப்பது),வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி கேரளாவில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். 


இந்நிலையில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ள மீரா மிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த ஜாமீன் மனுவில், "தன்னை பற்றி அவதூறாக செய்தி பரப்பியவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க பேசிய போது வாய் தவறி அந்த குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி பேசினேன். மேலும் பல படங்களில் நடிப்பதற்காக தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளேன். ஆகவே அவர்களுக்கு நஷ்டமாகிவிடும்" எனக் கூறியுள்ளார். அவருடன் சேர்ந்து கைதான அவருடைய நண்பர் சாம் அபிஷேகும் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். 


சர்ச்சை பேச்சு:




மீரா மிதுன்.. சர்ச்சைகளின் நாயகி. இவர் வாயைத் திறந்தாலே பிரச்சினை தான். தனது நண்பர்கள் தொடங்கி அஜித், விஜய், சூர்யா என அல்டிமேட் ஸ்டார் வரை அவர் பஞ்சாயத்துக்கு இழுக்காத ஆளே இல்லை என்று கூறலாம். வாயை விடுவது பின்னர் வாங்கிக் கட்டுவது என்பது மீரா மிதுனுக்கு நியூ நார்மல்.இதுவரை அவர் பேசியது எல்லாமே தனிநபர் தாக்குதல் என்றிருந்தன. ஆனால், இப்போது அவர் பேசியிருப்பது சமூகச் சர்ச்சை. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெறுப்புப் பேச்சை நெருப்பாய் உமிழ்ந்திருக்கிறார் மீரா மிதுன். இதனால், அவர் மீது சட்ட நடவடிக்கை பாய அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.



அப்படி என்னதான் பேசினார் மீரா?


 


"பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் வருகிறது. திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எல்லா வேலையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். அவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை" இது தான் மீராவின் பேச்சு. அவர் இதை நான் பேசவில்லை என்றெல்லாம் மழுப்ப முடியாது. ஏனெனில் அவர் பேசிய வீடியோ இணையத்தில் காட்டுத் தீ போல் பரவியது.




தமிழகம் முழுவதும் புகார் மனுக்கள் குவிந்த நிலையில், சென்னையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்தவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியுமான வன்னிஅரசு புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 


மேலும் படிக்க:மீரா மிதுனின் யூடியூப் பக்கம் முடக்கம்: கடிதம் அனுப்பியது சைபர் க்ரைம் போலீஸ்!