பிரபல நடிகை கௌதமி அளித்த  நில மோசடி புகாரில்  தலைமுறைவாக உள்ள அழகப்பனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 


பிரபல நடிகையும் பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தவருமான நடிகை கௌதமி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார்.


கோட்டையூரில் உள்ள தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவரான அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டதாகவும், 2004 ஆம் ஆண்டு தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது தனக்கு சொந்தமான நிலத்தை விற்க முடிவெடுத்து அழகப்பன் உதவியை நாடியதாகவும், ஆனால் தன்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். 


தொடர்ந்து கடந்த அக்.23ஆம் தேதி பாஜகவில் இருந்து தான் விலகுவதாக அறிவித்த கௌதமி, தான் 25 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தும் தேர்தல் நேரத்தில் கட்சியால் கைவிடப்பட்டதாகவும், பாஜகவின் மூத்த நிர்வாகிகள் அழகப்பனுக்கு துணையாக இருப்பதாகவும், கட்சியில் இருந்து எந்த ஆதரவும் தனக்கு கிடைக்காததாகவும் வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.


கௌதமியின் இந்த முடிவு சினிமா, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், கௌதமி புகார் அளித்த அழகப்பன் பாஜகவில் இல்லை என்றும்,  தான் கௌதமி பக்கம் ஆதரவாக இருப்பதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் கௌதமியின் புகாரின்பேரில், அழகப்பன் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், 6 முறை சம்மன் அளித்தும் அழகப்பன் உட்பட குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் எவரும் ஆஜராகவில்லை என மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தகவல் அளித்துள்ளது.


மேலும், தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 6 நபர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.