பெங்களூரு : சிக்கோடியில், அரசின் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த கணவரை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாசில்தாரை அந்த பெண்ணும், பொது மக்களும் சேர்ந்து அடித்து, உதைத்தனர். பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் டி.எஸ்.ஜெயதார். 2-ஆம் நிலை தாசில்தாரான அவரிடம், அதே தாலுகா அங்கலி கிராமத்தை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவரின் மகன் அரசின் மாதாந்திர உதவித்தொகை வழங்குமாறு கோரி விண்ணப்பம் வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உங்களின் தாயுடன் வந்து என்னை பார்க்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நிலையில் தனது மகனுடன் அந்த கைம்பெண் நேற்று சிக்கோடிக்கு வந்து தாசில்தார் டி.எஸ்.ஜெயதாரை நேரில் சந்தித்தார். அப்போது அந்த பெண்ணை மட்டும் அலுவலகத்திற்குள் வரும்படி தாசில்தார் கூறினார். இதையடுத்து அந்த பெண் தனது மகனை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு அவர் மட்டும் உள்ளே சென்றார்.




உடனே தாசில்தார் டி.எஸ்.ஜெயதார், கணவரை இழந்த அந்தப் பெண்ணிடம் ஆபாசமான முறையில் பேசினார். அத்துடன் நிற்காமல் அவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் ஒருபடி மேலே போய், தனது பேண்டை கழற்றி மர்ம உறுப்பை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் செய்வதறியமால் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டார். அவர் தனது மகனிடம் நடந்த விஷயங்களை கூறினார்.  இதை கேட்டுக்கொண்ட அவரது மகன் அந்த தகவலை ஊடகங்களிடம் தெரிவித்தார். மேலும் அந்த பெண் தனது மகனுடன் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆவேசமாக பேசி போராட்டம் நடத்தினார். அந்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். மேலும் தாசில்தார் டி.எஸ்.ஜெயதாரை அந்த பெண்ணும், அங்கு கூடியிருந்த பொதுமக்களும் சேர்ந்து அடித்து உதைத்தனர். 




இதில் தாசில்தார் டி.எஸ்.ஜெயதாரை அந்தப்பெண் செருப்பால் அடித்து தாக்கினார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது. இதை அறிந்த காவல்துறையினர் மற்றும்  இன்னொரு தாசில்தார் ப்ரீத்தம் ஜெயின் அங்கு வந்தார். அவரிடம் நடந்த சம்பவத்தை அந்த பெண் விவரித்தார். இதை கேட்டுக்கொண்ட அந்த தாசில்தார், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தாசில்தார் டி.எஸ்.ஜெயதார், இவ்வாறு பெண்களிடம் அருவருப்பாக நடந்துகொள்வது புதிது அல்ல என கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே தனது அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியரிடமும் இவ்வாறு தகாத முறையில் நடந்துகொண்டதாக அங்கு இருந்தவர்கள் கூறியுள்ளனர்.


மேலும் படிக்க : ‛மைசூரு மன்னர் பேமிளி’ புருடா: பெண்களிடம் லட்சங்களை அள்ளிய ‛நான் அவன் இல்லை’ சித்தார்த் கைது!