தூத்துக்குடி சோரீஸ்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன். இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 45). இவர் தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாக தொழில் செய்து வருகிறார். இவர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சோரீஸ்புரத்தில் தங்கநகை அடகு கடை நடத்தி வருகிறார். இவர்  மதியம் 2.45 மணி அளவில் தனது அடகுக் கடைக்கு காரில் வந்தார். அவர் காரை கடை ஓரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினாராம். அப்போது மின்னல் வேகத்தில் அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கும்பல் வந்து உள்ளனர். அவர்களை பார்த்ததும் முத்துக்குமார் தப்ப முயன்றாராம். ஆனால் அந்த கும்பல் முத்துக்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.





இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சத்தியராஜ், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.




கடந்த 2003-ம் ஆண்டு கோரம்பள்ளத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் அண்ணன் ஆத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். அவரது உடல் கடந்த 2006-ம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சோரீஸ்புரத்தை சேர்ந்த சிவக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் சிவக்குமார் கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடி கோர்ட்டு அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜேஷ் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.




இதனை தொடர்ந்து ராஜேஷ் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஜாமீனில் வெளிவர முயற்சி செய்து வருகிறாராம். ஆனால் ஜாமீன் பெற முடியாத அளவுக்கு முத்துக்குமார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஜாமீன் கிடைக்காமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேசின் ஆதரவாளர்கள், முத்துக்குமாரை கொலை செய்து இருப்பதாக கூறப்படுகிறது.




இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட முத்துக்குமாருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.