மதுரையில் 5 கோடி மதிப்பிலான நகையை வாங்கிவிட்டு பணம் கேட்டபோது, நகை கடை உரிமையாளரை மிரட்டிய வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை தெற்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 41). தான் வசிக்கும் பகுதியில் தங்க நகை வளையல் கடை நடத்தி வருகிறார். அவரிடம் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை மதுரை செல்லூரை சேர்ந்த தீபா மற்றும் தீபிகா, அன்னலெட்சுமி, மதுரை புளியங்குளம் பகுதியை சேர்ந்த தங்க முனீஸ்வரன், எல்லிஸ் நகர் ஜெய பிரபா, மாங்குளம் துர்காதேவி, கருப்பாயூரணி கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் மணிகண்டன் ஆகிய  8 பேரும்  வாங்கிவிட்டு அதற்கான பணத்தை அவர்கள் அவர்கள் தரவில்லை எனவும், அந்த பணத்தை அவர்களிடம் கேட்டபோது 8பேரும் பணத்தை திருப்பி தர மறுத்து  கொலை மிரட்டல் விடுத்ததாக விளக்குத்தூண் காவல்நிலையத்தில் ராம்குமார் புகார் அளித்துள்ளார்.



 

மேலும் ராம்குமார் ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை கொடுத்தற்கான ஆவணங்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அதன் அடிப்படையில் விளக்குத்தூண் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் ராம்குமாரிடம் 8 பேர் கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து அவர்கள் 8 பேரையும் விளக்குத்தூண் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.  5கோடி மதிப்பிலான நகையை வாங்கிவிட்டு பணம் கேட்டபோது போது நகை கடை உரிமையாளரை மிரட்டிய வழக்கில் 8பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.