தலைநகர் டெல்லி பல மோசமான மனிதநேயமற்ற சம்பவங்களுக்கு பெயர்போன இடமாக மாறி வருகிறது. அண்மையில் தனது லிவ்-இன் பார்ட்னரை கொடூரமாகக் கொன்ற நபர் குறித்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே அங்கே வேறு ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.


கருவூற்ற நாய் அடித்துக்கொலை: 


அண்மையில் தலைநகர் டெல்லியில் கருவூற்றிருக்கும் ஒரு நாயை கொடூரமாக தாக்கி கொன்றதாக நான்கு கல்லூரி மாணவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். பேஸ்பால் மட்டைகள், மரக் குச்சிகள் மற்றும் இரும்பு கம்பிகளை ஏந்திக்கொண்டு, தகரத்தால் ஆன ஒரு தற்காலிக அறைக்குள் நாயை இரக்கமின்றி அடித்துக் கொன்றுள்ளனர் அந்த இளைஞர்கள்.


நாயை அடிக்கும்போது சிரித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் குரல் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஓக்லாவில் உள்ள டான் போஸ்கோ தொழில்நுட்பக் கழகத்தின் மாணவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.


வைரலான அந்த வீடியோவில் மாணவர்கள் நான்கு பேரும் விளையாட ஒரு மைதானத்தில் ஒன்று சேர்வதையும் பிறகு அவர்கள் அந்த நாயை அடிக்க ஒன்று கூடுவதையும் காட்டுகிறது. நாய் தங்களைப் பார்த்துக் குரைத்ததால் இவ்வாறு செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர். 


இளகிய மனம் கொண்டவர்கள் இந்த வீடியோவைப் பார்ப்பதைத் தவிர்க்கவும்



மற்றொரு வீடியோ ஒன்றில் அவர்களில் ஒருவர் அந்த நாயை புல்தரையின் மீது தரதரவென்று அதன் கால்களைப் பிடித்து இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது. ஆனால் அந்த வீடியோவில் நாய் அசைவற்றுத்  தோன்றுகிறது. டெல்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


முன்னதாக நவம்பர் 20ம் தேதி இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் பதிவு செய்து டெல்லி போலீஸார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.


வீடியோ கிளிப்பில் நாயைக் காட்டவில்லை என்றாலும், யாரோ அந்த நாயை அடிக்கும்போது அதன் குரல் விம்முவதைக் கேட்க முடிகிறது. அதற்கு அவர்கள் சிரிப்பதைக் காணலாம், அவர்களில் ஒருவர் அந்த நாயை அடிக்க மற்றொருவரை அவரது செயலை அந்த வீடியோவில் ஊக்குவிக்கிறார்.


முன்னதாக, டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் அனைவரின் மனதிலும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


35 துண்டுகளாக வெட்டிக் கொலை :


அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார். 


வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று காட்டில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி உடல் பாகங்களை அப்புறப்படுத்தி உள்ளார்.


டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் அனைவரின் மனதிலும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.