தஞ்சை மாவட்டம் சுவாமிமலை பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மகள் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆகிவிட்டது. இதனால் தனது மகளுக்கு மறுமணம் செய்ய முடிவு செய்து, அதற்காக இணையதளத்தில் பதிவு செய்திருந்தார்.


இந்நிலையில் அந்த பெண்ணின் வாட்ஸ்அப்பிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் நான் சென்னையை சேர்ந்தவர். நெதர்லாந்தில் டாக்டராக பணியாற்றி வருகிறேன் என்று கூறி அறிமுகம் ஆகியுள்ளார். இதை தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த மர்ம நபர், அந்த பெண்ணிடம் உங்களுடைய விண்ணப்பத்தை பார்த்தேன். எனக்கு பிடித்திருக்கிறது என்றும், திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில வாரங்களுக்கு பிறகு நான் டெல்லிக்கு வருவதாகவும், நேரில் சந்தித்து திருமணத்தை பற்றி பேசி கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் தந்தையின் செல்போன் எண்ணிற்கு டெல்லி விமானநிலையத்தில் இருந்து அதிகாரிகள் பேசுவதாகவும், உங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள வந்தவர் எங்களிடம் இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.
அவரை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுவாமிமலை பகுதியை சேர்ந்த அந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர், பல்வேறு தவணைகளாக ரூ. 4 லட்சத்து 63 ஆயிரத்து 500-யை செலுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி அந்த நபரை விடுவிக்கவில்லை. இதையடுத்து தன்னிடம் பணத்தை மோசடி செய்வதற்காக விமான நிலைய அதிகாரிகள் என்று நெதர்லாந்தை சேர்ந்தவர் என்று கூறி அறிமுகமானவர் மற்றொரு நபரை பேச வைத்துள்ளார் என்பதை அவர் உணர்ந்தார், இதுகுறித்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ராம்தாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதுபோன்று பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் வரும் விளம்பரங்களை பார்த்து பணம் செலுத்துவதோ, அங்கிருந்து பேசுபவர்களிடம் உங்களின் வங்கி கணக்கு மற்றும் குடும்பத்தினர் குறித்த விபரங்களை கூறுவது போன்றவற்றை செய்தல் கூடாது. இது குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.