கன்னியாகுமரில் 12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பூதப்பாண்டி அருகேயுள்ள ஒரு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதற்காக அவர் குடும்பம் பூதப்பாண்டி பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளது. அந்த மாணவி கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. இதனால் பூதப்பாண்டி போலீசில் மாணவி காணாமல் போனது பற்றி புகாரளிக்கப்பட்டது. 


அதன்பேரில் மாணவியை போலீசார் வழக்குப்பதிவு செய்து பல இடங்களிலும் தேடினர். மேலும் இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் மாணவிக்கும், ஆரல்வாய்மொழியில் உள்ள பாரதி நகரைச் சேர்ந்த இளைஞரான பிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்தான் அப்பெண்ணை கடத்தி சென்றதும் தெரிய வந்ததால் பிரகாஷை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். 


பிரகாஷின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அது திருப்பூரில் இருப்பதாக காட்டியது. உடனடியாக திருப்பூர் செல்ல  போலீசார் நினைத்தார். ஆனால் பிரகாஷ்  மாணவியை குமரியில் உள்ள அவரது வீட்டு முன் விட்டு விட்டு தலைமறைவாகியுள்ளார். முன்னதாக மாணவியுடன் பிரகாஷ் இருப்பதை போலீசார் கண்டுபிடித்ததும், பிடிக்க வரும் தகவலை பிரகாஷூக்கு அவரது பெற்றோர் தெரிவித்துள்ளதால் பிரகாஷ் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. 


இந்நிலையில் மாணவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள் வெளியானது. அதாவது, ‘அந்த மாணவி கீரிப்பாறையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்ற போது, அங்கு வேலை விஷயமாக பிரகாஷ் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்பின் செல்போன் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். 
 
முதலில் நட்பாக பேசிய பிரகாஷ் பின்னர் காதலிப்பதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். மேலும் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி பிப்ரவரி 19 ஆம் தேதி திருப்பூருக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் போலீசார் தேடுவதை அறிந்ததும் மாணவியை விட்டுவிட்டு பிரகாஷ் தலைமறைவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். 


இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதால் வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் போக்சோ வழக்கில் பிரகாஷை போலீசார் தேடி வருகின்றனர்.