கோவை மாவட்டம் பொள்ளாச்சி எஸ்.வி. நாயுடு வீதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் சொந்தமாக பஸ் வைத்து இயக்கி வந்தார். இவரது மனைவி நாகலட்சுமி (76 வயது). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சதாசிவம் இறந்ததும் நாகலட்சுமி, அவரது மகன் செந்தில்வேல் உடன் வசித்து வந்தார். இந்நிலையில் செந்தில்வேல் இன்று காலை உணவு சாப்பிட வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.


பின்னர் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது கதவு திறந்து கிடந்தது. வீட்டினுள் சென்று செந்தில்வேல் பார்த்தபோது, சோபாவில் நாகலட்சுமி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில்வேல் தனது சகோதரிக்கு தகவல் கொடுத்தார்.  செந்தில்வேலும் அவரது சகோதரியும் வீட்டுக்குள் சென்று பார்த்த போது நாகலட்சுமி அணிந்திருந்த சுமார் 20 பவுன் நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்வேல் பொள்ளாச்சி மேற்கு காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அனந்தநாயகி தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நகைக்காக நாகலட்சுமி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.


அதிரடியாக விசாரணையில் இறங்கிய காவல் துறையினர் நாகலட்சுமியின் எதிர்வீட்டில் வசிக்கும் 17 வயது இளம்பெண்ணை கைது செய்தனர்.




இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது, ”எஸ்.வி. நாயுடு வீதியில் வசிக்கும் 17 வயது இளம்பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபரை இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் தான் நன்கு பழகிய எதிர் வீட்டில் நாகலட்சுமி ஏராளமான நகைகளை அணிந்து வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து, அந்த இளம்பெண் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளார். நாகலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவரது நகைகளையும் எடுத்துள்ளார்.


நாகலட்சுமியின் மகன் செந்தில்வேலும் அவரது சகோதரியும் வீட்டிற்குள் வந்த போது, அந்த இளம்பெண் சோபா அருகிலேயே ஒளிந்து இருந்திருக்கிறார். இவர்களைப் பார்த்ததும், பாட்டி கை, கால்களை இழுத்துக் கொண்டு துடித்ததைப் பார்த்து வீட்டிற்குள் வந்தேன் என்று கூறியவரே அங்கிருந்து நைசாக நழுவி விட்டார்.




நாகலட்சுமி இறந்த தகவல் கிடைத்ததும் நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை துவக்கினோம். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தோம். அதில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில் எதிர் வீட்டு இளம்பெண் மட்டுமே நாகலட்சுமியின் வீட்டிற்குள் வந்து சென்றது தெரியவந்தது. முதலில் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரித்தோம். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். சந்தேகம் வலுத்ததும் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முறைப்படி விசாரித்தோம். அதில் அவர் நாகலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் ஆடைக்குள் ஒளித்து வைத்திருந்த சுமார் 20 போன் நகைகளையும் பறிமுதல் செய்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.


நாகலட்சுமியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை கைது செய்தனர். மேலும் அப்பெண்ணின் காதலரிடமும் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  காதலனை கரம் பிடிக்க இளம்பெண், மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.