அமெரிக்காவில் கைநிறைய சம்பளம் வாங்கி கொண்டிருந்த கிருபாகரன் மைக்காப்பிள்ளை என்னும் கிரு மைக்காபிள்ளை, தனது வேலையை விட்டுவிட்டு இந்தியாவில் நிறுவனம் தொடங்கப்போவதாக கூறியபோது, கிரு நிபுணத்துவம் வாய்ந்த துறையொன்றை தேர்வு செய்வார் என அவரது பெற்றோர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு உள்நாட்டு உணவு பிராண்ட் ஒன்றை தேர்வு செய்தார். 


சேலத்தை பூர்வீகமாக கொண்ட கிரு மைக்காபிள்ளை, சிறு வயதில் இருந்தே தொழிலதிபராக வேண்டும் என்ற கனவோடு இருந்தார். பொறியியல் படித்து முடித்த சில ஆண்டுகளில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய கிரு, மாசசூட்ஸ் டார்ட்மவுத் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்க சென்றார். அங்கு படிப்பை முடித்த பின்னர் அமெரிக்க வங்கி ஒன்றில் பணியாற்றத் தொடங்கினார். 


வேலையை ராஜினாமா செய்த கிரு


’’விடுமுறையில் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம், சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான யோசனைகளை திட்டமிட்டு இடங்களை தேடுவேன். ஆனால் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு செல்லவில்லை என்றால் அந்த திட்டம் வேலை செய்யப்போவதில்லை என்பதை உணர்ந்தேன். அதனால் 2018ஆம் ஆண்டு என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியதாக கூறும் கிரு மைக்காபிள்ளை, தொழில் தொடங்கும் யோசனை இருந்த காலத்திலேயே விவசாய பொருட்களை அடிப்படையாக கொண்ட முயற்சி ஒன்றை தொடங்க திட்டமிட்டதாக கூறுகிறார் கிரு, நான் அமெரிக்காவில் இருந்தபோது அதிக தரத்துடன் மேட் இன் இந்தியா விவசாயப் பொருட்களை பார்த்தேன். இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் இந்தவகை பொருட்களுக்கு பெரிய அளவில் சந்தை வாய்ப்புகள் இருப்பதை நான் உணர்ந்தேன். தமிழ்நாட்டின் சிறிய நகரங்களில் ஒன்றான சேலத்தில் ஆராய நிறைய இருக்கிறது என்பதை எனது மூலப்பொருட்களுக்கான தேடலின் போது உணர்ந்தேன். இறுதியாக எனது சொந்த ஊரிலேயே பல ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வரும்  மஞ்சளை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்த முடிவு செய்தேன். இதற்காக உள்ளூர் விவசயிகளிடம் இருந்து ஆர்க்கானிக் முறையில் பயிரிடப்பட்ட மஞ்சளை கொள்முதல் செய்து மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துகிறோம். 


தி டிவைன் ஃபுட்ஸ்


கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட கிருவின் தி டிவைன் ஃபுட்ஸ் (The Divine Foods) ஸ்டார்ட் அப் நிறுவனம், அதன் தயாரிப்புகளை பல்வேறு நாடுகளில் விற்பனை  செய்து வருகிறது. அமெரிக்க வேலையில் இருந்த போது சேமித்த சம்பளத்தை முதலீடாக கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கிய கிரு  தற்போது கோடிகளில் வருமானம் பார்த்து வருகிறார்.  சேலம் மஞ்சளில் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை குர்குமின் என்னும் உயிர்வேதியல் கலவை உள்ளது. இந்த குர்குமின் கலந்திருக்கும் விகிதம் மஞ்சள் வகைகளுக்கு ஏற்ப மாறுபடும். அதிக அளவிளான குர்குமினை கொண்ட மஞ்சள் சிறந்த  தரம் கொண்டதாக அளவிடப்படுகிறது.


இது குறித்து கிரு கூறுகையில், மருத்துவ குணம்  வாய்ந்த மஞ்சள் ஆக்சிஜனேற்றத்தை கொண்டுள்ளது. அழற்ச்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, ஆண்டிசெப்டிக் பண்புகள் பலவற்றை கொண்ட மஞ்சள் புற்றுநோயை குணப்படுத்தும் என நம்பப்படுகிறது. தரமான மஞ்சள் தூளை நுகர்வோர்கள் கண்டறிய சந்தை போக்கு இன்னும் சவாலாகவே உள்ளது. பல பிராண்டுகள் கலப்பட மஞ்சளை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே இந்த அற்புதமான மசாலாவின் திறனை ஆராய்ந்து சந்தைப்படுத்த நினைத்தேன் என சொல்லும் கிரு, எனவே தான் தனது நிறுவனத்திற்கு The Divine Foods (தெய்வீக உணவுகள்) என பெயரிட்டதாக கூறுகிறார். 



ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் மஞ்சள், கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் புனிதமான அம்சங்களையும் கொண்டுள்ளது. மருத்துவ பயன்பட்டுக்கும் மஞ்சள் உதவுவதால் தெய்வீக அம்சம் கொண்டதாகவே மஞ்சள் கருதப்படுகிறது. சமநிலை அற்ற சந்தைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனமாக தி டிவைன் ஃபுட்ஸ் விளங்குகிறது. தமிழகத்தில் உள்ள இயற்கை விவசாயிகளுடன் நெருக்கமான வணிகத் தொடர்பை கொண்டுள்ள நாங்கள், நியாயமான, நிலையான விலையை கொடுத்து தரமான மஞ்சளை கொள்முதல் செய்கிறோம். விலை பொருட்களின் ரகம், தரத்தை பொருத்து கொள்முதல் செய்யப்படும் மஞ்சளின் விலை நிர்ணயம்  செய்யப்படுகிறது என்கிறார் கிரு, 


இரண்டு மடங்கு விலையில் மஞ்சள் கொள்முதல் 


மஞ்சள் விவசாயி ராஜ்குமார் கூறுகையில், சந்தை விலை எப்போதும் மாறிக்கொண்டே இருப்பது எங்களை போன்ற விவசாயிகளுக்கு கடினமாக உள்ளது. ஒரு கிலோ மஞ்சளை சந்தையில் 70 ரூபாய்க்கு விற்றோம், இதற்காக போக்குவரத்து செலவும் தனியாக செய்ய வேண்டி இருந்தது. ஆனால் தற்போது நம்மிடம் நேரடியாக மஞ்சளை கொள்முதல் செய்து சந்தை விலையைவிட இருமடங்கு விலையான 120 ரூபாய் வரை கொடுப்பதால் கிரு உடனான வியாபாரம் பலனளிக்கிறது. 



நிலையான சந்தையை கண்டறிய விவசாயிகளுக்கு உதவியதற்காக மகிழ்ச்சி அடைவதாக கூறும் கிரு, தற்போது 10 விவசாயிகளிடம் இருந்து மஞ்சளை கொள்முதல் செய்து வருவதாகவும், ஆரம்பத்தில் விவசாயிகளிடம் இருந்து மஞ்சள் விரலை மட்டும் கொள்முதல் செய்து தனியாக அரைத்து வந்த நிலையில், தற்போது அரைத்த நிலையிலேயே விவசாயிகளிடம் இருந்து மஞ்சளை கொள்முதல் செய்து வருகிறோம். இதனை கொண்டு ஆர்கானிக் மஞ்சள் தூள் முதல் மஞ்சள் சேர்க்கப்பட்ட சொறி தைலம் உள்ளிட்ட மதிப்புக்கூட்டுப்பொருட்களை 200 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறோம். குர்குமின் சோப், கோல்டன் மில்க் லேட், கோல்டன் லேட், ரெடி மிக்ஸ் பானம்  ஆகியவை வேகமாக விற்பனையாகி வருகிறது. சோதனை அடிப்படையில் ஆர்க்கானிக் தேனை அடிப்படையாக கொண்ட பொருட்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். 


கோடிகளில் வருமானம் 


எங்களின் தயாரிப்புகள் இந்தியா மட்டுமில்லாது, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வலைதளம் மற்றும் அமேசான் மூலம் கிடைக்கிறது. அமெரிக்காவின் Food and Drug Administration - அமைப்பின் அனுமதியை பெற்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அமேசான் மூலமும் எங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறோம். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் சந்தைப்படுத்துவதற்காக ஒரு பைசா கூட செலவழிக்காத நிலையிலும் எங்களது தயாரிப்புகள் அங்கு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தற்போது ஆண்டுக்கு சாராசரியாக ஒரு கோடிக்கு வருவாய் ஈட்டுகிறோம் என்கிறார் கிரு மைக்காப்பிள்ளை.