RBI On Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என, ரிவர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.


ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ஆர்பிஐ


அதன்படி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவிகிதத்திலேயே தொடரும் என தெரிவித்துள்ளார். பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் தனிநபர் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பதுன் குறிப்பிடத்தக்கது. மக்களவை தேர்தல் முடிவுகளை  தொடர்ந்து, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என கருதப்பட்ட நிலையில்  இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 






 


ரெப்போ வட்டி மாற்றமில்லை ஏன்? - ஆர்பிஐ


இதுதொடர்பாக சக்தி காந்த தாஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், “நிதிக் கொள்கைக் குழு 4:2 பெரும்பான்மையுடன் பாலிசி ரெப்போ விகிதத்தை 6.5% ஆக தொடர முடிவு செய்தது. இதன் விளைவாக, நிலையான வைப்புத்தொகை வசதி (SDF) விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆக உள்ளது” என தெரிவித்துள்ளார்.


பொருளாதார வளர்ச்சி - ஆர்பிஐ:


நடப்பு நிதியாண்டான 2024-2025ல் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி, மொத்தமாக 7.2 சதவிகிதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளதாக சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டின் ஜிடிபி வளர்ச்சி முதல் காலாண்டில் 7.3 சதவிகிதம் ஆகவும், இரண்டாவது காலாண்டில் 7.2 சதவிகிதம் ஆகவும், மூன்றாவது காலாண்டில் 7.3 சதவிகிதம் ஆகவும் மற்றும் நான்காவது காலாண்டில் 7.2 சதவிகிதம் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த நிதியாண்டில் வளர்ச்சி:


தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தற்காலிக மதிப்பீடுகள் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை, அதாவது 2023-24 ஆம் ஆண்டிற்கான GDP வளர்ச்சியை 8.2% ஆக வைத்துள்ளது என சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், “2024-25 ஆம் ஆண்டில், இதுவரை உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் பின்னடைவைத் தக்கவைத்துள்ளன. உள்நாட்டுத் தேவையை வலுப்படுத்தியதன் பின்னணியில் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. ஏப்ரல் 2024 இல் 8 முக்கிய தொழில்கள் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்தன. கொள்முதல் நிர்வாகக் குறியீடு, அதாவது உற்பத்தித் துறையில் கொள்முதல் நிர்வாகக் குறியீடு மே 2024 இல் தொடர்ந்து வலிமையை வெளிப்படுத்தியது. கிடைக்கக்கூடிய உயர் அதிர்வெண் குறிகாட்டிகளில் இருந்து தெளிவாகத் தெரிந்தபடி, சேவைத் துறை மிதவையான சூழலை தக்க வைத்துள்ளது. மே 2024 இல் கொள்முதல் நிர்வாகக் குறியீடு சேவைகள் 60.2 ஆக வலுவாக இருந்தன. இது செயல்பாட்டில் தொடர்ச்சியான மற்றும் வலுவான விரிவாக்கத்தைக் குறிக்கிறது” எனவும் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.